பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்ப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை: காங்கிரஸ்

பெங்களூரு, 
கர்நாடகத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் நேற்று கூறியிருந்தார்.  பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறுகையில், “ 

குஜராத்தில் தொடக்க கல்வி பாடத்திட்டத்தில் பகவத்கீதை சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகத்திலும் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளன. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும். மேலும் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்கப்படும். பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்கக்கூடாது என்று எங்கும் சட்ட விதிகள் இல்லை. பைபிள் ஆக இருந்தாலும் சரி, குரான் ஆக இருந்தாலும் சரி, அதில் நல்ல கருத்துகள் இருந்தால் அதை பாடத்திட்டத்தில் சேர்த்தால் தவறு இல்லை” இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா, “ பகவத் கீதையை பள்ளி பாடங்களில் சேர்ப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை”என்றார். 
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “ நீதி போதனைகள் கற்பிப்பதில் எங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. நாங்கள் அரசியல் அமைப்பையும் மதச்சார்பின்மையையும் நம்புகிறோம். பகவத் கீதை, குரான், பைபிள் என எதை கற்பித்தாலும் எங்களுக்கு ஆட்சேபனை எதுவும் கிடையாது. பகவத் கீதை கற்பிப்பது குறித்து கர்நாடக அரசு இன்னும் முடிவு எதையும் எடுக்கவில்லை” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.