ரஷியாவும்-உக்ரைனும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்- ஜப்பான் பிரதமர் வலியுறுத்தல்

புதுடெல்லி:
இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா டெல்லியில் நேற்று நடைபெற்ற 14-வது இந்தியா- ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்றார். 
ஐதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் கிஷிடாவும் உக்ரைன் விவகாரம் குறித்து விவாதித்ததாக, இரு நாடுகள் இணைந்துள்ள வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
உக்ரைன் மீதான ரஷிய படைகள் தாக்குதல் மற்றும் மனிதாபிமான நெருக்கடி குறித்து இரு தலைவர்களும் தீவிர கவலை தெரிவித்ததாகவும், வன்முறைக்கு உடனடி முற்றுப்புள்ளி வைக்க பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இரு தலைவர்களும் வலியுறுத்தி உள்ளதாக அந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
உக்ரைனில் நிலவும் தற்போதைய நெருக்கடியை சமாளிக்க சர்வதேச சமூகம் ஒருங்கிணைந்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஜப்பான் பிரதமர்  ஃபுமியோ கிஷிடா கோரிக்கை விடுத்தாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பின்னர் பிரதமர் மோடியுடன் கூட்டாக செய்தியாளர்களிடம் சந்தித்த ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் சர்வதேச ஒழுங்கின வேர்களை அசைத்து விட்டது என தெரிவித்தார்.

உலகின் எந்தவொரு பகுதியிலும் ராணுவ பலத்தை பயன்படுத்தி தற்போதைய நிலையை மாற்ற முயற்சிப்பதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.
ரஷியாவும்-உக்ரைனும் பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.