“அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டால் கொரோனா 4-ம் அலை பரவலை தடுக்கலாம்" – மா.சுப்பிரமணியன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு மருத்துவக் கட்டமைப்புகளை ஆய்வு செய்வதற்காக தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தற்போது சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகளில் கொரோனா நான்காவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. கான்பூர் ஐ.ஐ.டி மாணவர்கள் கொரோனா நான்காம் அலை தமிழகத்தில் பரவும் என்று கூறியுள்ளனர். நமது அண்டை மாநிலமான கேரளாவில் கூட 740 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி இறப்பு 59 பேர் என உள்ளது.

மா. சுப்பிரமணியன்

தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக கடந்த 10 நாள்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு 100-க்கும் குறைவாகவே உள்ளது. இறப்பு எண்ணிக்கை பூஜ்ஜியம் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தில் கொரோனா நான்காவது அலை பரவாது எனச் சொல்ல முடியாது. இதனை அலட்சியமாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது. எனவே நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனா நான்காவது அலை தமிழகத்தில் பரவாமல் இருக்க, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

தென் மாவட்டங்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்கள் அலட்சியம் காட்டுகின்றனர். தமிழ் வழி கல்விக்கு இந்த அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மருத்துவ படிப்பில் தமிழ் வழியில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

மா. சுப்பிரமணியன்

உக்ரைன் நாட்டிலிருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள், தொடர்ந்து மருத்துவப் படிப்பை மேற்கொள்வதற்காக மத்திய அரசு மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போலந்து போன்ற நாடுகளில் உக்ரைன் நாட்டிலுள்ள பாடத்திட்டமே மருத்துவப்படிப்பில் நடைபெறுவதால், சில மாணவர்கள் போலந்து போன்ற நாடுகளில் கல்வி கற்கவும் விரும்புகின்றனர். இதுகுறித்து மத்திய அரசு மூலமாக நாங்கள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.