ஆர்ஆர்ஆர் – எத்தனை கோடி வியாபாரம் ?

'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு ராஜமவுலி இயக்கத்தில் வெளிவர உள்ள படம் 'ஆர்ஆர்ஆர்'. ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பாட், அஜய் தேவகன், ஸ்ரேயா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். அடுத்த வாரம் மார்ச் 25ம் தேதி உலகம் முழுவதும் இப்படம் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் இந்தப் படத்தின் வியாபாரம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா ஆகியவற்றின் தியேட்டர் உரிமை 200 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம். அதைவிட அதிகமாக ஹிந்தியில் 250 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு உரிமை 175 கோடி, கர்நாடகா உரிமை 80 கோடி, தமிழக உரிமை 75 கோடி, கேரளா உரிமை 20 கோடிக்கும் வியாபாரம் நடந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக, மொத்தமாக 800 கோடி வரையில் தியேட்டர் உரிமை வியாபாரம் நடந்துள்ளது.

படத்தின் 5 மொழிகளுக்குமான ஓடிடி, சாட்டிலைட் உரிமை மட்டும் 300 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின. ஆடியோ ரைட்ஸ் 25 கோடிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி மொத்தமாக 1125 கோடி வரையில் வியாபாரம் நடைபெற்றுள்ளது. இவற்றில் ஓடிடி, சாட்டிலைட் உரிமைத் தொகையான 300 கோடி, ஆடியோ உரிமையான 25 கோடி தயாரிப்பாளருக்கு நேரடியாக லாபக் கணக்கில் போய்விடும். தியேட்டர் உரிமை விற்கப்பட்டுள்ள 800 கோடி ரூபாய் தொகையை எந்த அடிப்படையில் விற்றுள்ளார்கள் என்பதன் மூலம்தான் தயாரிப்பாளருக்கு நேரடியாக எவ்வளவு லாபம் போகும் என்பதை கணக்கிட முடியும்.

'பாகுபலி 2' படத்தை விடவும் 'ஆர்ஆர்ஆர்' வசூலில் பெரிய சாதனை படைத்து, புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.