பஞ்சாப் ஆம் ஆத்மி அரசில் 10 அமைச்சர்கள் பதவியேற்பு: 25,000 அரசு பணியிடங்களை நிரப்ப முடிவு

சண்டிகர்:  பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி பெண் எம்எல்ஏ உட்பட 10 பேர் நேற்று அமைச்சராக பதவியேற்றுக்கொண்டனர். பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து, இம்மாநிலத்தின் புதிய முதல்வராக பக்வந்த் மான் கடந்த புதனன்று பதவியேற்றுக்கொண்டனார். சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் பூர்விக கிராமமான ஷாகித் பகத்சிங் நகர் மாவட்டத்தில் உள்ள கட்கர்கலனில் நடந்த பதவியேற்பு விழாவில் முதல்வர் மட்டும் பதவியேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து நேற்று முதல்வர் பக்வந்த் மான் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா நேற்று  நடைபெற்றது. இந்த விழாவில் ஆம் ஆத்மி பெண் எம்எல்ஏ உட்பட 10 பேர் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு  பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். அனைவரும் பஞ்சாப் மொழியில் பதவியேற்றுக்கொண்டனர். ஹர்பல் சிங் சீமா மற்றும் குர்மீத் சிங் மீட் ஹாயர் தவிர மற்ற எட்டு பேரும் முதல் முறை எம்எல்ஏக்கள்.  இதைத்தொடர்ந்து, புதிய முதல்வர் பகவந்த் மான் சிங் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி, மாநிலத்தில் 25,000 அரசு காலி பணியிடங்கள் நிரப்புவது என முடிவு செய்யப்பட்டது. போலீஸ் துறையில் மட்டுமே 10,000 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.