Kiruthikaga Udhayanidhi creates awareness with her toilet story: டாய்லெட் ஸ்டோரி மூலம் கழிப்பறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கிருத்திகா உதயநிதி.
சென்னை மாநகராட்சி பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கழிப்பறை குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சியை ப்ரோமோட் செய்யும் விதமாக, உதயநிதி ஸ்டாலினின் மனைவியும் இயக்குநருமான கிருத்திகா உதயநிதி தன்னுடைய டாய்லெட் ஸ்டோரியை சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
என் கழிப்பறை அனுபவத்தை உங்களுடன் பகிரப்போகிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு பயணங்கள் மிகவும் பிடிக்கும். அம்மா, அப்பாவுடன் சேர்ந்து நிறைய பயணம் செய்திருக்கிறேன். பயணம் நல்ல அனுபவமாக இருந்தாலும், பயணத்தின்போது பலரும் அனுபவிக்கும் பெரிய பிரச்னை கழிப்பறை ஒன்று தான். நாம யாரும் பொதுக் கழிப்பறை பக்கம் கூட போக மாட்டோம்.
நான் நிறைய முறை, யாரென்று கூட தெரியாத பலருடைய வீடுகளுக்கு சென்று அவர்களின் கழிப்பறையை பயன்படுத்திக்கொள்ள நான் அனுமதி கேட்டு நின்றுள்ளேன். எனவே இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டறிய வேண்டும். இதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இது ஏப்ரல் 2 மற்றும் 3 தேதிகளில் மேப்பத்தான் என்ற பெயரில் நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சி மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்து, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த இருக்கின்றன.
இதையும் படியுங்கள்: மொத்தமாக வாங்குவோருக்கு டீசல் விலை ரூ25 உயர்வு; தமிழக அரசின் முடிவு என்ன?
சென்னை சாந்தோமில் அடுத்த மாதம் 2ம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்கி 2 நாட்களுக்கு நடக்கிறது. இதில் சென்னையில் உள்ள கழிப்பறைகளின் விவரங்கள் ஒருங்கிணைக்கப்படும். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுக்கழிப்பறையை எப்படி மீண்டும் பொது பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம்? என்பது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பலருடைய ஆலோசனைகளும் கேட்கப்படும். இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும். மேலும் உங்களுடைய கழிப்பறை அனுபவ கதையை #OnceinaLOO என்ற ஹேஷ்டேக் பதிவிட்டு உங்கள் சமூக வலைதள பக்கத்தில் நீங்கள் பகிர வேண்டும். இதனால் கழிப்பறை குறித்த விழிப்புணர்வு பலரிடம் சென்றடையும். இவ்வாறு, வீடியோவில் கிருத்திகா உதயநிதி பேசி இருக்கிறார்.
டாய்லெட் அனுபவங்கள் குறித்து பலரும் பேச தயங்கும் நிலையில், கிருத்திகாவின் இந்த முயற்சியை திமுகவினர் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலினின் கனவு திட்டமான சிங்கார சென்னை திட்டத்திற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கிருத்திகா உதயநிதியின் இந்த முயற்சி, சிங்கார சென்னை திட்டத்திற்கு உதவும் வகையில் உள்ளதாகவும் பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.