காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் 5 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

சித்தூர் :  சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் 5 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீகாணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில். இந்த கோயிலுக்கு மாவட்டம் மட்டுமின்றி தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.அவ்வாறு, பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்கு ஏற்ப கோயில் உண்டியலில் பணம், நகை மற்றும் வெள்ளி உள்ளிட்டவை செலுத்துகின்றனர். அதேபோல், ஞாயிற்றுக்கிழமையான நேற்று விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 5 மணிநேரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாத வகையில் கோயில் நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. அதேபோல், தற்போது கோடைக்காலம் என்பதால் கோயில் நிர்வாகம் சார்பில் வரிசையில் வரும் பக்தர்களுக்கு தண்ணீர், மோர், குளிர்பானம் உள்ளிட்டவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாத வகையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் இருசக்கர வாகனம், ஆட்டோ மற்றும் கார்களில் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.