நடிகர் சங்கத் தேர்தல்: "விஷாலும், கார்த்தியும் பொறுப்பேற்பர்; அதன்பிறகு…" – மனோபாலா

மகிழ்ச்சியில் திளைக்கிறது நாசர் தலைமையிலான பாண்டவர் அணி. கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் பிரச்னையின் காரணமாக வாக்குகள் எண்ணப்படாமல் இருந்தன. இந்நிலையில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டது. அதில் பாண்டவர் அணியினர் வெற்றி பெற்றனர்.

இது குறித்து பொருளாளராக வெற்றி பெற்ற நடிகர் கார்த்தி, ”ரெண்டு ஆண்டு சட்டப் போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வெற்றி இது. பதவியேற்கும் நாளில் இருந்து மூன்றாண்டுகள் பதவி வகிப்போம். மூன்று ஆண்டுகளில் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும்.”‘ என்று தெரிவித்திருக்கிறார்.

தலைவராக நாசர், துணைத்தலைவர்களாக பூச்சி முருகன், கருணாஸ், பொதுச்செயலாளராக விஷால் ஆகியோர் வெற்றி பெற்றனர். அதைப்போல போட்டியிட்ட அனைத்து பதவிகளிலும் பாண்டவர் அணியே வென்றிருக்கிறது. குஷ்பு, கோவைசரளா, ராஜேஷ், மனோபாலா, சிபிராஜ், சோனியா, நந்தா, ரமணா, ஶ்ரீமன் உள்பட போட்டியிட்ட பாண்டவர் அணியினர் செயற்குழு உறுப்பினர்களாகவும் வென்றுள்ளனர்.

புது நிர்வாகிகள்

இதுபற்றி செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான மனோபாலாவிடம் பேசினேன்.

”இப்படி ஒரு முடிவு வந்திருக்கறது சந்தோஷமா இருக்கு. கடவுளும், ஜனங்களும் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்காங்க. நாங்க பதவி ஏற்கும் நாளிலிருந்து தொடர்ந்து மூன்றாண்டுகள் பதவியில் இருப்போம். தேர்ந்தடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான சர்டிபிகேட் இன்று வழங்கப்பட்டிருக்க வேண்டும். தேர்தல் அதிகாரி இன்று விடுமுறை எடுத்துக்கொண்டதால், நாளைதான் சர்டிபிகேட் எங்க கைக்கு வரும். இடைப்பட்ட வருடத்தில் எஸ்.ஓ. ஒருவரை நியமித்திருந்தனர். அவரிடமிருந்து முறைப்படி அந்த பொறுப்புகளை வாங்கின பிறகே விஷால், கார்த்தி உள்பட பலரும் பொறுப்புகளை கையிலெடுக்க வேண்டும்.

அதன்பின் தமிழக முதல்வரை சந்தித்து ஆலோசிக்க உள்ளோம். பொருளாதார முன்னேற்றம் குறித்த ஆலோசனை தான் முதலில் பேச உள்ளோம். முதற் செயற்குழு கூட்டம் நாளையோ அல்லது நாளை மறுநாளோ நடக்க வாய்ப்பிருக்கிறது. சங்கக் கட்டடம் இப்போது துருப்பிடித்து கிடக்கிறது. முதலில் அதில் உள்ள துருக்களை எல்லாம் அப்புற படுத்த வேண்டியிருக்கிறது. அதன்பிறகு உள்ளே நுழைவோம். நாடக நடிகர்களுக்கு நிரந்தர வருமானத்துக்கான ஒரு வழியையும், கட்டடத்தையும் கட்டி முடிக்கவும் எங்கள் பணியை சிறப்பாக செய்ய உள்ளோம்.” என்கிறார் மனோபாலா.

இந்நிலையில் மீண்டும் நிர்வாகிகளாக நடிகர் சங்கத்தில் பொறுப்பேற்க இருக்கும் நிர்வாகிகளுக்கும், வெற்றிவாகை சூடிய அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.