நாடு முழுவதும் 3 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன; மத்திய அமைச்சர்| Dinamalar

புதுடில்லி: நாடு முழுவதும் 2020-21ம் ஆண்டில் 30 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஈடாக 3 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் லோக்சபாவில் தகவல் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நடந்து வருகிறது. லோக்சபாவில் ‛பொது உள்கட்டமைப்பு திட்டங்களின் கட்டுமானத்திற்காக இதுவரை வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை மற்றும் காடு வளர்ப்பின் மூலம் இதுவரை நடப்பட்டுள்ள மரங்கள், அதற்கு செலவினங்கள்’ தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பதிலளித்தார். அவர் அளித்த பதில்: பல்வேறு சட்ட விதிகள், நீதிமன்ற உத்தரவுகளின் படி மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை அந்தந்த மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வழங்கி வருகின்றன.

அதன் அடிப்படையில் 2020-2021ம் ஆண்டில் நாடு முழுவதும் பொது திட்டங்களை செயல்படுத்துவதற்கும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கும் இடையூறாக இருந்த 30,97,721 மரங்களை வெட்டுவதற்கு உரிய அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக நாடு முழுவதும் 3,64,87,665 மரங்கள் நடப்பட்டு உள்ளது. இதற்கு ரூ.358.87 கோடி செலவாகியுள்ளது. 2020-21ம் ஆண்டில் டில்லியில் ஒரு மரம் கூட வெட்டவில்லை, மாறாக 53 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.