சீனாவின் ஒவ்வொரு நகரங்களுக்கும் பரவும் கொரோனா ஷென்யாங் நகரில் ஊரடங்கு

பெய்ஜிங்: 
சீனாவின் ஊகான் நகரில்  தான் கொரோனா நோயாளி முதன் முதலில் கண்டறியப்பட்டார். அங்கிருந்துதான் உருவானதா என்ற ஆராய்ச்சிகள் இரண்டாண்டுகளுக்கும் மேல் நீண்டு கொண்டிருக்கின்றன. 
தற்போது சீனாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து அங்கு பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஒரே ஒரு நோயாளி கண்டறியப்பட்டாலும் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் தனிமை  முகாம்களுக்கு அனுப்பி கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தியது சீன அரசு .
சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒமைக்கரான் பரவல் காரணமாக தொற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து கடும் கட்டுப்பாடுகளை சீனா அமல்படுத்தி வருகிறது. அதேபோல், ஆங்காங்கே தீவிர ஊரடங்குகளையும்ம் சீனா அமல்படுத்தி வருகிறது.
இந்தநிலையில் சீனாவில் கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 5,280 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சீனா  கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
குறிப்பாக ஜிலின் மாகாணத்தில்   ஒமைக்ரான் மாறுபாடு  வேகமாக பரவி வருகிறது. சீனாவில் தற்போதைய தொற்று எண்ணிக்கையில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக ஜிலினில் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜிலினில், அண்டை மகாணமான லியோனிங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இங்குள்ள ஷென்யாங் நகரம் கடும் பாதிப்பை சந்தித்து வருவதால் அங்கு நேற்று திடீரென ஊரடங்கு  அறிவிக்கப்பட்டது. சுமார் 90 லட்சம் மக்கள் வசிக்கும் தொழில் நகரமான ஷென்யாங் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ உள்ளிட்ட கார் தொழிற்சாலைகளும் இந்த நகரில் அமைந்துள்ளன. அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இன்று 4,770 புதிய கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கடந்த சனிக்கிழமை 2 இறப்புகளும் பதிவாகி உள்ளது. ஷென்யாங் நகரில் இன்று 47 புதிய கொரோனா தொற்று  கண்டறியப்பட்டுள்ளது.
 ஷாங்காய் நகரில்  865 அறிகுறியற்ற கொரோனா வைரஸ் பாதிப்புகள்  பதிவாகியுள்ளன, இது தொடர்ந்து ஐந்தாவது நாளாக சாதனை அதிகரிப்பு என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
அந்த 47 பேரும் தனிமைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் அடுத்த 20 நாட்கள் வெளியே வர முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.