பப்ஜி நண்பர்களுக்கும் பகிரப்பட்ட வீடியோ… 6 மாதங்களாக வன்கொடுமைக்கு ஆளான பெண் -விருதுநகர் அதிர்ச்சி

விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இவர், சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் ஆக்டிவ்-ஆக இருந்திருக்கிறார். இந்நிலையில் விருதுநகர் மேலத்தெருவில் மெடிக்கல் குடோன் நடத்திவரும் ஹரிஹரன்(27) ஃபேஸ்புக் மூலம் இளம்பெண்ணுக்கு ரிக்வஸ்ட் விடுத்துள்ளார். இதை ஏற்று இளம்பெண்ணும் ஹரிஹரனும் ஃபேஸ்புக் வழியே பழகி வந்துள்ளனர். பின்னர் நாளடைவில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் காதலை சொல்லி பல இடங்களுக்கும் ஒன்றாக சென்று ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை

இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக இளம் பெண்ணும் அவரும் ஒன்றாக ஊர் சுற்றி விட்டு இறுதியாக ஹரிஹரனின் மெடிக்கல் குடோனுக்கு வந்துள்ளனர். அங்கு இளம்பெண்ணும் ஹரிஹரனும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை, அந்த பெண்ணுக்கு தெரியாமல் ஹரிஹரன் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார். பின்னர் இந்த வீடியோவை தனது நண்பர்களான தொழிலாளி மாடசாமி (37), டிரைவர் பிரவீன் (22), திமுக பிரமுகா் ஜூனைத் அகமது (27) ஆகியோருக்கு போட்டு காண்பித்து சிலாகித்துள்ளார்.

இதைப்பார்த்த நண்பர்கள் மூவரும், இளம்பெண்ணுடன் தாங்களும் தனிமையில் இருக்க வேண்டுமென இச்சையை வெளிப்படுத்தியுள்ளனர். அதற்கு ஹரிஹரனும் சம்மதம் தெரிவித்து, தன்னிடமிருந்த வீடியோவை நண்பர்கள் மூன்று பேருக்கும் வாட்ஸ்அப்பில் அனுப்பியதோடு, இளம்பெண்ணின் செல்போன் எண்ணையும் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த வீடியோவை வைத்துக்கொண்டு இளம்பெண்ணை தொடர்பு கொண்ட மற்ற மூவரும் தங்களுடனும் தனிமையில் இருக்க வேண்டும் என இளம் பெண்ணை கட்டாயப்படுத்தியுள்ளனர். இல்லையெனில் வீடியோவை சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி இளம்பெண்ணை பலவந்தப்படுத்தி வன்கொடுமை செய்துள்ளனர்.

ஹரிஹரன் & ஜூனைத் அகமது

இந்தநிலையில் இந்த விஷயம், ஹரிஹரன் உள்பட 4 பேருடனும் பப்ஜி விளையாட்டு மூலம் நண்பர்களாக இணைந்த 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு தெரியவந்துள்ளது. முன்னதாக, ஆபாச வீடியோக்கள், மீம்ஸ்கள் என பலவற்றையும் இவர்கள் 8 பேரும் தங்களுக்குள் பகிர்ந்துள்ளனர். அதனடிப்படையில், ஹரிஹரன், இளம்பெண்ணுடன் தனிமையிலிருந்த வீடியோவும் பள்ளி மாணவர்கள் 4 பேருக்கும் செல்போனில் பகிரப்பட்டுள்ளது. இதைப்பார்த்த பள்ளிமாணவர்கள் 4 பேரும், தாங்களும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டும் என ஹரிஹரனை கேட்டுள்ளனர். இதற்கும் சம்மதம் தெரிவித்த அவர், இளம்பெண்ணின் செல்போன் எண்ணை பள்ளிமாணவர்களிடம் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து பள்ளி மாணவர்களில் ஒருவர், மற்ற 3 பேருக்கும் தலைமையாக இருந்து இளம்பெண்ணிடம் செல்போனில் பேசியுள்ளனர். அப்போது, ‘ஹரிஹரன் உள்பட 4 பேருடனும் தனிமையில் இருந்தது எங்களுக்கு தெரியும். இதை வெளியே சொல்லக்கூடாதென்றால் எங்கள் 4 பேருடனும் தனித்தனியே தனிமையில் அனுபவிக்க நீ வர வேண்டும்’ என சொன்னதாக தெரியவருகிறது. இதற்கு மறுத்தால், ‘ஹரிஹரனுடன் இருந்த வீடியோவை உனது வீட்டுக்கே வந்து, உனது அம்மாவிடம் காண்பிப்பேன் என மிரட்டியதாக’ சொல்லப்படுகிறது. இதனால் பயந்துபோன அந்த இளம்பெண், பள்ளி மாணவர்களிடம் தன்னை விட்டுவிடுமாறு போனில் அழுது கெஞ்சியுள்ளார். ஆனால், விடாப்பிடியாக இருந்த பள்ளி மாணவர்கள் தங்களின் ‘ஆசைக்கு இணங்க மறுத்தால் நீ விபரீத விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்’ என மீண்டும் மிரட்டி ஆள் இல்லா சமயம், இளம்பெண்ணை அவர் வீட்டிற்கே சென்று வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

தனது வாழ்க்கை இப்படி சீரழிந்துவிட்டதே என எண்ணி அப்பெண் தினமும் அழுதுள்ளார். இந்நிலையில், ஹரிஹரன், அவரின் நண்பர்கள், பள்ளி மாணவர்கள் என 8 பேரும் தொடர்ந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். வீடியோவை வைத்து மிரட்டி கடந்த 6 மாதத்தில், 8 பேரும் பலமுறையும் இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இவர்களின் பாலியல் தொந்தரவால் உடல்நலம் குன்றிய இளம்பெண், இதை பொறுத்துக்கொள்ள முடியாமல், விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து ஹரிஹரன், மாடசாமி, பிரவின், ஜுனைத் அகமது, மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேரையும் கைது செய்தனர்.இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஜூனைத் அகமது, விருதுநகர் 10-வது வார்டு திமுக இளைஞர் அணி அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இளம்பெண்ணின் காதலன் ஹரிஹரனும் 22-வது வார்டு இளைஞரணி உறுப்பினராக உள்ளார்.

பிரவீன்- மாடசாமி

கைது செய்யப்பட்டவர்களிடம் விருதுநகர்‌ துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா, 8 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தை பதிவுசெய்தார். இதைத்தொடர்ந்து, கைதுசெய்யப்பட்ட ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனைத் அகமது ஆகிய 4 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பள்ளி மாணவர்கள் 4 பேரும் விருதுநகர் ஜூவனைல் நீதி குழும நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு மதுரை தெப்பக்குளம் சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவரை ஆபாச படம் எடுத்து மிரட்டி கூட்டு பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.