'பீஸ்ட் Vs கேஜிஎப் 2' மோதல் தேவையா?

தென்னிந்திய அளவில் அதிக வசூலைப் பெறும் நடிகர்களில் தமிழ் நடிகரான விஜய்க்கு முக்கிய இடமுண்டு. கடந்த சில வருடங்களாக அவர் நடித்து அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் வெற்றிகரமான படங்களாக அமைந்து வருகின்றன. “மெர்சல், சர்க்கார், பிகில், மாஸ்டர்” என தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளைக் கொடுத்துள்ளார். அவர் நடித்து அடுத்து வெளிவர உள்ள 'பீஸ்ட்' படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகும் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதற்கு மறுநாள் ஏப்ரல் 14ம் தேதி 'கேஜிஎப் 2' படம் இந்திய அளவில் பான்-இந்தியா படமாக வெளியாக உள்ளது. 'கேஜிஎப்' படத்தின் முதல் பாகத்திற்கு ஏற்கெனவே தமிழகத்திலும் நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்தது. அதனால், இரண்டாம் பாகத்தைப் பார்க்க ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இருப்பினும் 'பீஸ்ட்' படத்துடன் ஏற்படும் மோதலால் 'கேஜிஎப் 2' படத்திற்கு தமிழகத்தில் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 'கேஜிஎப் 2' படத்தின் வெளியீட்டை எப்போதோ அறிவித்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

'பீஸ்ட்' படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிட உள்ளனது. இதனால், அவர்கள் அதிகமான தியேட்டர்களில் படத்தை வெளியிடுவர். அதன் காரணமாக 'கேஜிஎப் 2' படத்திற்கு தமிழகத்தில் சரியான தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அது போலவே, கர்நாடகாவில் 'கேஜிஎப் 2' படத்திற்குத்தான் அதிக முன்னுரிமை வழங்குவர். அங்கு 'பீஸ்ட்' படம் வெளியாவதற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்க சிக்கல் ஏற்படும்.

'கேஜிஎப் 2' படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன் உள்ளிட்ட ஹிந்தி நடிகர்கள் இருப்பதாலும், ஏற்கெனவே 'கேஜிஎப்' படத்தின் முதல் பாகம் ஹிந்தியில் நல்ல வசூலைப் பெற்றதாலும் 'பீஸ்ட்' படத்தை ஹிந்தியில் அதிக தியேட்டர்களில் வெளியிட வாய்ப்புகள் இல்லை.

'பீஸ்ட்' படத்தையும் பான்-இந்தியா படமாக வெளியிட்டாலும் 'கேஜிஎப் 2' படத்துடன் போட்டி போட்டு வசூலைக் குவிப்பது அவ்வளவு சுலபமல்ல என்று கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். அதே சமயம், தமிழில் 'பீஸ்ட்' படம் வசூலில் புதிய சாதனை படைக்கும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.