கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் சிறு, குறு தொழில்களை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? ஒன்றிய அரசுக்கு எம்பி தயாநிதி மாறன் கேள்வி

புதுடெல்லி: கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்த ஒன்றிய அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது? என மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு கடந்த 14ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் நேற்று பங்கேற்ற மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், ஒன்றிய அரசின் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்: அதன் விவரங்கள் பின் வருமாறு:* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை உலக சந்தையில் காட்சிப்படுத்த ஒன்றிய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா எனவும், எனில் அதற்காக வகுக்கப்பட்ட திட்டங்களின் பட்டியல் மற்றும் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? அதை தெரியப்படுத்தவும்.* ஆன்லைன் விற்பனையால் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்தித்த பாதிப்புகள் குறித்து ஒன்றிய அரசு ஏதேனும் ஆய்வுகளோ அல்லது துறை வல்லுநர்களிடம் கலந்தாலோசனையோ மேற்கொண்டுள்ளதா?* கொரோனா பெருந்தொற்று நாட்களில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலில் தனி நிபுணத்துவம் பெற்ற பாரம்பரிய, பூர்வீக கலைகள் மற்றும கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்ற தொழில்கள் சந்தித்த இன்னல்கள் குறித்து ஒன்றிய அரசு ஏதேனும் ஆய்வு மேற்கொண்டுள்ளதா? * பாரம்பரிய, பூர்வீக கலை மற்றும் கைவினைப் பொருட்களில் நிபுணத்துவம் பெற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான ஆன்லைன் சந்தை மற்றும் டிஜிட்டல் விற்பனை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அல்லது ஊக்குவிக்க ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.