சாக்கடையை சுத்தம் செய்த ஆம் ஆத்மி கவுன்சிலருக்கு பாலாபிஷேகம் செய்த மக்கள்

புதுடெல்லி:

டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி அடுத்து பஞ்சாப் சட்டசபை தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

டெல்லியில் அடுத்து உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்காக டெல்லியின் முக்கிய தெருக்களுக்கு சென்று அங்கு குடியிருக்கும் மக்களின் குறைகளை கேட்டு வருகிறார்கள்.

அதன்படி டெல்லியில் மக்கள் அதிகம் வாழும் பகுதிக்கு சென்ற ஆம் ஆத்மி கவுன்சிலர் அங்குள்ள மக்களிடம் குறை கேட்டார். அப்போது அந்த பகுதியில் உள்ள சாக்கடை பல நாட்களாக அடைத்து இருப்பதாகவும், அதனை சீர் செய்ய வேண்டும் எனவும் மக்கள் கூறினர்.

இதை கேட்டதும், கவுன்சிலர் சாக்கடைக்குள் குதித்து அதன் அடைப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அடைப்பை அகற்றிய பின்னர் அவர் சாக்கடை கழிவுகளுடன் வெளியே வந்தார்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள், சாக்கடை அடைப்பை அகற்றிய ஆம் ஆத்மி கவுன்சிலருக்கு பாலால் அபிஷேகம் செய்தனர். இதனை சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

கடந்த 2 நாட்களாக இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பலரும் ஆம்ஆத்மி கவுன்சிலரின் நடவடிக்கையை பாராட்டி வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.