குடிபோதையில் தகராறு: அண்ணனை கழுத்தை நெரித்து கொன்று புதைத்த வாலிபர்

கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் பாபு(வயது26). தொழிலாளி.இவர் தனது தாய் மற்றும் தம்பி ஷாபு(23) ஆகியோருடன் அந்த பகுதியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பாபுவை காணவில்லை. இதையடுத்து தனது மகனை கண்டுபிடித்து தருமாறு சேர்ப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை தேடி வந்தனர்.
நேற்று காலை பாபுவின் வீட்டு வழியாக நடந்து சென்ற சிலர், கை ஒன்று தெரிவதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து அந்த பகுதியை தோண்டினர். அப்போது உள்ளே வாலிபரின் உடல் இருந்தது. பின்னர் இறங்கி மீட்டு பார்த்தபோது, அது பாபுவின் உடல் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி பாபு எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது போலீசாருக்கு பாபுவின் தாய் மற்றும் சகோதரர் ஷாபுவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் தனது அண்ணனை கொன்றதை ஷாபு ஒப்புக்கொண்டார். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
எனது சகோதரர் அடிக்கடி குடித்து விட்டு வந்து தாயிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்றும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்த அவர் எனது தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவரை தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் சகோதரை தாக்கி கீழே தள்ளி கழுத்தை நெரித்து கொன்றேன்.
பின்னர் இது யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக அங்கேயே புதைக்க முடிவு செய்தேன். எனது தாயின் உதவியுடன் வீட்டின் பின்புறம் குழிதோண்டி புதைத்தேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி என்னை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் உடந்தையாக இருந்த பாபுவின் தாய் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை முடிந்த பின்னர் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.