கோலிவுட் ஸ்பைடர்: நண்பர்களுக்காக விஜய் எடுத்த முடிவு; பிரமாண்டத்துக்குத் தயாராகும் 'வாடிவாசல்!'

* தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன், சூர்யா கூட்டணியில் உருவாக உள்ள படம் ‘வாடிவாசல்’. சமீபத்தில் ஈசிஆரில் இரண்டு நாட்கள் அதன் டெஸ்ட் ஷூட் நடந்தது. ஜல்லிக்கட்டுக் காளைகள் திமிறிக்கொண்டு வர, அதை மாடுபிடி வீர்களுடன் சேர்ந்து சூர்யா அடக்கும் காட்சிகள் டெஸ்ட் ஷூட் செய்யப்பட்டன. அந்த காட்சிகள் எடுத்த வரையிலும் திருப்தி என்கிறார்கள். ஆகையால், தென்மாவட்ட கதைக்கள ஏரியாவை, சென்னையிலேயே செட் போட்டு படமாக்கத் திட்டமிட்டு வருகின்றனராம். இன்னொரு விசேஷம், போனி கபூரோடு சேர்ந்து ‘வலிமை’யை தயாரித்த ஜீ ஸ்டூடியோஸ் தாணுவோடு சேர்ந்து தயாரிக்கிறதாம். எனவே பிரமாண்ட வாடிவாசலை எதிர்பார்க்கலாம் என்றும் தகவல்.

வாடிவாசல் டெஸ்ட் ஷூட் பூஜையின் போது..

* `விஜய் 66′ படத்திற்கான முன்தயாரிப்புகளில் இருக்கும் விஜய், இப்போது நேரம் கிடைத்திருப்பதால் நீண்ட நாளாக சந்திக்காமல் இருந்த லயோலா கல்லூரி நண்பர்களைச் சந்திக்கிறார் விஜய். தினமும் பத்து பேரோடு அவரது கொட்டிவாக்கம் வீட்டில் இந்த சந்திப்பு நடக்கிறது. அவருடைய பள்ளி நண்பர்கள் இதில் சேரவில்லை. தொழிலில் முடங்கி இருக்கும் நண்பர்களுக்கு செய்கிற பொருளாதார உதவியும் இதில் சேர்த்தியாம். அவருடைய கல்லூரி தோழர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். ஒரு வருஷத்திற்கு ஒரு முறையாவது குடும்பத்தோடு சந்தித்துக் கொள்ளலாம் என்று கொள்கை முடிவும் எடுத்திருக்கிறார்கள்.

* மகன் கௌதம் கார்த்திக் காதல் கைகூடாமல் போய்விட்ட பிறகு மகனைவிட அதிக கவலையில் இருக்கிறார் கார்த்திக். உடனே சொந்தத்தில் பெண் பார்த்து திருமணம் செய்யும் ஏற்பாட்டில் அவர் தீவிரமாக இருக்கிறார். அடுத்து ஆறு மாதத்திற்குள் திருமணம் முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் கார்த்திக்.

கௌதம் கார்த்திக்!

* ‘பொன்னியின் செல்வன்’ இறுதிக்கட்ட பணிகளில் மூழ்கிவிட்டதால் மணிரத்னம் இப்போது அதிகம் யாரையும் சந்திப்பதே இல்லை. அயராமல் காலையிலிருந்து மாலைவரை எடிட்டிங், டிரிம் செய்வதில் தீவிரமாக இருக்கிறார். மற்ற படங்களைக் கொஞ்சம் ஒத்தி வைத்துவிட்டு எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தும் அவரோடுதான் இருக்கிறார். இந்த மாத கடைசியிலேயே முதல் பிரதியைப் பார்த்துவிடும் திட்டத்தில் இருக்கிறார்களாம்.

* ஒப்புக்கொண்டுள்ள சில படங்களில் மட்டும் நடித்து விட்டு நடிப்பதை நிறுத்திக் கொள்கிற முடிவுக்கு வந்து விட்டார் நயன்தாரா. சிறு படங்களை நிறைய தயாரிக்கும் திட்டத்தில் நயனும், விக்கியும் இருக்கிறார்கள். அவர்கள் உடனடியாக திருமண பந்தத்தில் இணைய வேண்டும் என விக்கியின் தாயார் விரும்புகிறார். அதையே நயன் அம்மாவும் விரும்புகிறாராம். அதனால் அடுத்த வருட ஆரம்பத்தில் கட்டாயமாகத் திருமணம் செய்ய வேண்டும் என்பதுதான் இணையர் எடுத்திருக்கிற முடிவு.

* இந்த முறை நடிகர் சங்கத்தில் கூடிப்பேசி சில முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். கட்டடம் கட்டி முடிக்கிற வரை முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் அரசியல் ஈடுபாட்டில் தீவிரம் காட்டக்கூடாது. ஆளும் கட்சியில் இருப்பவர்களைச் சீண்டக்கூடாது என முடிவுசெய்திருக்கின்றனர். கடைசி செயற்குழு உறுப்பினர் வரை இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். எல்லோரும் இதில் ஒத்துழைப்பதாக உறுதி அளித்திருப்பதால் கட்டடம் கட்டி முடிப்பது சாத்தியமே என்கிறார்கள்.

* புலி வருது.. புலி வருது கதையாக சொல்லிக்கொண்டிருந்த அட்லி இந்திப் படம், விரைவில் டேக் ஆஃப் ஆக உள்ளது. இந்தப் படம் ட்ராப் ஆகிவிட்டது என ஒரு பக்கம் தகவல் பறந்தாலும், அதில் துளியும் உண்மை இல்லை என்கிறார்கள். ஷாரூக்கின் தீவிர ரசிகனான அட்லி, ஒரு வழியாக ஷாரூக்கின் தேதிகளை வாங்கியதில் விரைவில் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.