ஹாலிவுட் படங்களுடன் போட்டியிட கட்டாயப்படுத்துகிறார்கள்: வெற்றிமாறன்

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் 26வது சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் வெற்றி மாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியிருப்பதாவது: என் திரைப்படத்துக்கு தேவையான உலகத்தை நான் தேர்வு செய்வேன். பின்னர் அந்த உலகத்தை புரிந்துகொள்ள முயற்சி செய்வேன். அதிலிருந்து கதையை தேடுவேன்.

ஒரு பகுதியில் நான் கற்க, புரிந்துகொள்ள அல்லது அதிலிருந்து வெளியே சொல்ல ஏதாவது இருந்தால் அங்கு செல்வேன். அங்குள்ள மக்களை புரிந்துகொள்ள முயற்சி செய்வேன். அவர்களின் பிரச்சனைகளை தெரிந்துகொள்வேன். அதை வைத்து கதை தயாரிக்க முயற்சிப்பேன். சில நேரங்களில் அந்த கதையை சொல்ல முடியாமல் தோல்வியும் அடைந்துள்ளேன்.

ஆனால், அந்த உலகத்தை சரியாக காட்டுவது முக்கியம். கதைக்களம் நடக்கும் பகுதியை சேர்ந்தவரை சிறிய வேடங்களில் நடிக்க அழைத்துவரும்போது, அவர் தமது பகுதிக்கு உரிய சில விசயங்களை மாற்ற சொல்லி பரிந்துரைப்பார். அதை வைத்து கதைக்களத்தை மாற்றுவோம். நெகிழ்வுதன்மை மிகவும் முக்கியம். அந்த பகுதியை சேர்ந்த துணை நடிகர்களை தேர்வு செய்தால் உண்மைத்தன்மை மாறாமல் இருக்கும்.

இயக்குநர் எந்த பிரச்சனைக்கும் தீர்வை சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர் அரசியல்வாதியும் அல்ல. கணித மேதையும் அல்ல. விஞ்ஞானியும் அல்ல. அவர் கலைஞர். தான் வாழ்ந்த உலகில் கண்டதை அவர் திரையில் பிரதிபலிக்கிறார். இதன் மூலம் கோபம், வலி, மகிழ்ச்சி அனைத்தும் வெளிப்படும். கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக ஹாலிவுட் படங்களுடன் போட்டியிட கட்டாயப்படுத்தப்படுகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.