ஆற்றில் குடிமகன்களுக்கு தெப்பம் அபு்புறப்படுத்த போலீஸ் எச்சரிக்கை| Dinamalar

புதுச்சேரி-நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, தமிழக குடிமகன்களின் வசதிக்காக ஆற்றில் இயக்கப்பட்ட தெப்பத்தை அப்புறப்படுத்த, போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

புதுச்சேரி மாநிலத்தின், தமிழகத்தின் எல்லை பகுதியையொட்டி உள்ள செட்டிப்பட்டு கிராமத்தில், சங்கராபரணி ஆற்றின் கரையோரம் சாராயக் கடை அமைந்துள்ளது. அக்கடைக்கு, புதுச்சேரி மட்டுமின்றி தமிழக பகுதிகளான திருவக்கரை, எறையூர், நெமிலி, செங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, அதிகமான ‘குடிமகன்’கள் சங்கராபரணி ஆற்றைக் கடந்து வருகின்றனர்.சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, தமிழக பகுதியைச் சேர்ந்த குடிமகன்கள், ஆற்றை கடந்து வர முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், வாடிக்கையாளர்களின் வசதிக்காக, சாராயக் கடை உரிமையாளர் தன் சொந்த செலவில், ஆற்றில் தெப்பம் அமைத்து, தமிழக குடிமகன்களை செட்டிப்பட்டு சாராயக் கடைக்கு அழைத்து வந்து, திருப்பி தெப்பத்தில் அனுப்பி வருகிறார்.இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியான நிலையில், கலால் துறை அதிகாரிகள் மற்றும் மேற்கு பகுதி எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன், திருக்கனுார் போலீசார் அப்பகுதியில் நேற்று ஆய்வு செய்தனர்.தெப்பத்தின் மூலம் குடிமகன்களை அழைத்து வந்து, திருப்பி அனுப்பும் போது விபத்து, உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், தெப்பத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென, கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.