முடிவுக்கு வருகிறது உக்ரைன் – ரஷ்யா போர் : நாள் குறித்த புதின்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை ஒரு மாதத்தை கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் ரஷ்யா பெரும் சேதங்களை சந்தித்துள்ளதாகவும் இதுவரை ரஷ்யாவின் 7 ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக படைகளை முறையாக வழிநடத்தவில்லை என ரஷ்யாவின் 37-வது படைப்பிரிவின் தலைவரை சக வீரர்களே சுட்டுக்கொன்றதாக மேற்குலக நாடுகளின் உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன. 

போரில் தங்கள் தரப்பை சேர்ந்த 300 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கிரம்ளின் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உண்மையில் இந்த எண்ணிக்கை ஐந்து அல்லது ஆறு மடங்கு அதிகம் இருக்கலாம் என என கூறப்படுகிறது. 

உக்ரைன் மீதான படையெடுப்பால் கடும் பொருளாதார தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டு தோறும் மே 9-ம் தேதியை போர் வெற்றி விழாவாக ரஷ்யா கொண்டாடி வரும் நிலையில், தற்போது அதே நாளில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் விளாடிமிர் புதின் திட்டமிட்டுள்ளார். 

ஹிட்லரின் நாஜிப் படைகளை வீழ்த்தி இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெற்ற நாளை ஆண்டுதோறும் ரஷ்யா மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறது. மே 9-ம் தேதியான அந்த தினம் தேசிய விடுமுறை என்பதால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், தொழிற்சாலைகள் என அனைத்தும் மூடப்பட்டிருக்கும். 

May 9

கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020-ம் ஆண்டு மட்டும் மே 9-ம் தேதி விழா ரத்து செய்யப்பட்டது. இதனிடையே இதுவரை திரட்டப்பட்ட தகவல்களின்படி வரும் மே 9-ம் தேதி உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்ற தகவல் தங்களுக்கு தெரிவந்துள்ளதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது. 

இதுமட்டுமின்றி, உக்ரைன் எல்லையில் போருக்கு முன்னர் அமைக்கப்பட்ட மருத்துவமனைகளில் அதிக எண்ணிக்கையிலான காயம்பட்ட வீரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது. மேலும், உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு இல்லாத நிலையில் ரஷ்ய துருப்புகள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும், கைப்பற்றிய பகுதிகளை தொடர்ந்து தக்கவைக்க முடியாமல் ரஷ்ய வீரர்கள் திணறி வருவதாகவும் உக்ரைன் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.