அடையாளம் vs வர்க்கம்; கோவில் திருவிழா பங்கேற்பு குறித்த சிபிஎம் முடிவு – விவாதத்தை தூண்டும், கருத்தியல் மாற்றம்

Arun Janardhanan

Identity vs class: Tamil Nadu CPI(M)’s temple fest bid marks ideological shift, sparks debate: சங்பரிவார் அமைப்புகளை எதிர்கொள்வதற்காக தமிழகத்தில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் தீவிரமாக பங்கேற்க தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த வாரம் மதுரையில் நடைபெறவுள்ள அக்கட்சியின் மாநில மாநாட்டை முன்னிட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடந்த புதன்கிழமை இதனை அறிவித்தார். இந்த நடவடிக்கை இடதுசாரி வட்டங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் இது சிபிஐ(எம்) இன் அடிப்படை சித்தாந்தத்தில் இருந்து ஒரு பெரிய மாற்றமாக பரவலாகக் கருதப்படுகிறது. மேலும், இது மதம் மற்றும் அதன் சின்னங்கள் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து தங்கள் அரசியல் வாழ்க்கையை தனிமைப்படுத்தி வைத்திருக்கும், கட்சியின் உறுப்பினர்களிடையே மோதலையும் குழப்பத்தையும் தூண்டக்கூடும் என்றும் கருதப்படுகிறது.

பாலகிருஷ்ணனின் இந்த அறிவிப்பு, கோவில்களில் சங்பரிவாரத்தின் ஆதிக்கத்திற்கு “திடமான எதிர்ப்பை” கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டது என்று காவிரி டெல்டாவின் விவசாயப் பகுதியைச் சேர்ந்த ஒரு தலைவர் கூறினார். மாநில சிபிஐ (எம்) இன் வரவிருக்கும் 23 வது கட்சி மாநாட்டில் இந்த முடிவானது முறையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றாலும், இது வெகுஜன மக்களை உள்ளடக்கிய கோயில் திருவிழாக்களின் கலாச்சார அம்சங்களை எடுத்துக்கொள்வது குறித்த முடிவு என்று அந்த தலைவர் கூறினார்.

நாடு முழுவதும் உள்ள சாதாரண மக்கள் கடவுள் நம்பிக்கை உட்பட பல்வேறு ஆழமான அடையாளங்களைக் கொண்டிருந்தாலும், சிபிஐ(எம்) உட்பட இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்போதும் அடையாள அரசியலை தவிர்த்து வர்க்க அரசியலில் கவனம் செலுத்தி வருகின்றன.

திமுக உட்பட அனைத்து திராவிடக் கட்சிகளும் இப்போது தங்களின் பகுத்தறிவு அரசியலை முன்னிறுத்துவதைத் தவிர்த்து வரும் நிலையில், தமிழ்நாடு CPI(M)ன் நடவடிக்கையானது, தேர்தல் அரசியலில் இன்னும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க முற்படும் வகையில், கட்சி தளத்தை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டது. 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், CPI(M) திமுக-காங்கிரஸ் கூட்டணியின் ஒரு பகுதியாகப் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சட்டமன்ற பிரசாரத்தின் போது ஆற்றிய உரைகளில், இந்து கோவில்களின் பாதுகாப்புக்காக தனது கட்சி பல தசாப்தங்களாக மேற்கொண்ட பணிகளை பட்டியலிட்டு வந்தார். தமிழ் வீடுகளில் மிகவும் பிரபலமான இந்துக் கடவுளான முருகப் பெருமானை மையமாகக் கொண்ட ஒரு பிரச்சாரத்தின் மூலம் பாஜக கடவுள் நம்பிக்கையாளர்களின் வாக்குகளை நோக்கி சென்றதால், திராவிட மற்றும் இடதுசாரிக் கட்சிகள் அதிர்ச்சியடைந்தன.

“சிபிஐ(எம்) தமிழ்நாடு பிரிவின் இந்த நடவடிக்கை மிகவும் சந்தர்ப்பவாத மற்றும் பாசாங்குத்தனமான நடவடிக்கையாகும். குறைந்தது 50 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களுடன் பழகத் தொடங்கியிருக்க வேண்டும். மதம் மற்றும் ஆன்மீகத்தில் ஈடுபடுவதற்கு அந்த இயங்கியல் அணுகுமுறை தேவையானது,” என்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் அரசியல் அறிவியல் தலைவர் ராமு மணிவண்ணன் கூறினார். “விவசாயிகள், ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேற்றம் மற்றும் வர்க்க அரசியலை ஊக்குவிக்க அவர்கள் சாதி மற்றும் அனைத்து அடையாளங்களையும் மறுத்தனர். அவர்கள் ஐக்கிய முற்போக்கு அரசாங்கத்தின் (மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி) கூட்டணியில் இருந்தபோது மதத்தைப் பற்றி சிந்திக்கவில்லை. பாஜக மதத்தை திறம்பட பயன்படுத்துவதை பார்த்துவிட்டு இப்போது வாக்கு வங்கி அரசியலுக்காக மத நம்பிக்கை அரசியலில் நுழைகிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.

இதையும் படியுங்கள்: தமிழக பள்ளி மாணவர்களின் புகைப்பட கண்காட்சி; பாராட்டிய ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக்

கேரளாவில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் சிபிஐ(எம்) பல ஆண்டுகளாக இதேபோன்ற நகர்வுகளை மேற்கொண்டுள்ளது என்பது வேறு விஷயம். அங்குள்ள பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்து பண்டிகைகளைக் கொண்டாடுவதில் பங்கேற்பது மட்டுமின்றி, பல முக்கிய கோயில் கமிட்டிகளுடன் சிபிஐ(எம்)  தொடர்பை உருவாக்கியுள்ளது.

1970கள் மற்றும் 80களில் தென்னிந்தியாவின் இடதுசாரி ஆயுதக் குழுக்களுடன் தொடர்புடைய ஒரு முக்கிய எழுத்தாளர், கவிஞர் மற்றும் முன்னாள் நக்சலைட் சிவிக் சந்திரன், மக்களின் வாழ்வில் கடவுள் நம்பிக்கை இருப்பதை ஒப்புக்கொள்ளும் தமிழ் கம்யூனிஸ்டுகளின் முயற்சியை வரவேற்றார். “ஆனால், கம்யூனிஸ்டுகள் எதையாவது முயற்சி செய்வது வழக்கமான பயனுள்ள தந்திரமாக இருக்கக்கூடாது, ஆனால் இது கடவுள் நம்பிக்கை உடையவர்களுடன் ஈடுபடுவதற்கு ஒரு வழியைப் பெறுவதற்கான முயற்சியாகும். மத நம்பிக்கை உடையவர்களை வகுப்புவாதிகளிடமிருந்து விலக்கி வைக்க வேண்டுமானால், கம்யூனிஸ்டுகள் மத நம்பிக்கை உடையவர்களின் மதிப்புகளை உள்வாங்க வேண்டும். மதச்சார்பு இல்லாமல், கோவில்களுக்கு செல்லாமல் ஆன்மீகமாக மாற முடியும் என்பதை கம்யூனிஸ்டுகள் உணர வேண்டும்,” என்றார்.

“அவர்கள் வர்க்கத்தைத் தவிர அனைத்தையும் மறுத்தனர்” இது தான் “கம்யூனிஸ்ட் இயக்கங்களின் பிரச்சனை” என்று சிவிக் சந்திரன் குற்றம் சாட்டினார். மேலும், “அவர்கள் எல்லா அடையாளங்களையும் மறுத்தனர். நீங்கள் ஒரு தனி நகர்ப்புற நக்சலாக இருந்தால், ஒற்றைப் பரிமாண வர்க்கப் போரை நீங்கள் நம்பலாம். ஆனால் நீங்கள் ஒரு வெகுஜன இயக்கமாக இருக்கும்போது, ​​நீங்கள் குடும்பங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும், மிகவும் சாதாரண மக்களுடன் பேச வேண்டும், அவர்கள் அனைவரும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள்… அரசியலில் ஆன்மீக மயமாக்கலும் சாத்தியம் என்பதை அவர்கள் (கம்யூனிஸ்டுகள்) உணரட்டும்,” என்று அவர் கூறினார்.

கம்யூனிஸ்டுகளும், பகுத்தறிவுவாதிகளும் ஒரே சமயத்தில் பொருள்முதல்வாதிகளாகவும் ஆன்மீகவாதிகளாகவும் இருக்க முடியுமா என்பது குறித்து, தமிழ் எழுத்தாளர் சோ தர்மன், “அவர்களால் முடியும் போல் தெரிகிறது” என்றார். குருட்டு நம்பிக்கைகளுக்கும் உள்ளூர் கலாச்சாரத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் கம்யூனிஸ்டுகளுக்கு ஒருபோதும் தெரியாது என்று அவர் கூறினார். “ஆங்கிலேயர்களுக்கு கூட அது தெரியும், அவர்கள் ஒருபோதும் நம்பிக்கையைத் தொடவில்லை. ஆனால் பெரியாரும் கம்யூனிஸ்டுகளும் கடவுள் நம்பிக்கையை மறுத்து, கடவுள்களை கேலி செய்தனர். அவர்கள் என்ன சம்பாதித்தார்கள்? கடவுள் நம்பிக்கையின் நுணுக்கங்களை அவர்கள் இப்போது உணர்ந்திருந்தால் நான் மகிழ்ச்சியடைகிறேன், வணங்கப்படும் வெறும் கல் ஒரு குருட்டு நம்பிக்கை அல்ல, ஆனால் நினைவுகள் மற்றும் நமது சொந்த வரலாற்றின் சின்னம்,”என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.