“முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றால் வாழ்த்துபவர்கள், பிரதமர் மோடியை விமர்சிக்கிறார்கள்!" – வானதி

பா.ஜ.கவின் தேசிய மகளிரணி கூட்டம் நேற்று புதுச்சேரியில் நடைப்பெற்றது. அனைத்து மாநில மற்றும் தேசிய மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்ட அந்த கூட்டத்தை துவக்கி வைத்த தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், “நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மூலம் பா.ஜ.க-வின் செல்வாக்கு நாடு முழுவதும் அதிகரித்திருப்பதும், நம் வேட்பாளர்களுக்கு பெண்களின் ஆதரவு இருப்பதும் தெளிவாகியிருக்கிறது. குறிப்பாக உத்தப்ரபிரதேச தேர்தல் முடிவுகள் பா.ஜ.க மீது பெண்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. உத்தரப்பிரதேச தேர்தல் பிரசாரத்தை மாதிரியாகக் கொண்டு அனைத்து மாநிலங்களிலும் பின்பற்ற வேண்டும்.

வானதி சீனிவாசன்

பெண்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக அதிகாரத்தை பா.ஜ.க உறுதி செய்திருக்கிறது. சாதாரண நிலையில் இருக்கும் ஒரு பெண்ணும் கட்சிப் பதவிகளில் உயர முடியும்” என்றார்.

தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நடைப்பெற்ற வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ”மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறையில் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதை அந்த மாநிலத்தின் பெண் முதல்வர் தடுக்க தவறிவிட்டார்” என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.

மேலும் மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாகவும், அதனால் அங்கு மகளிரணி போராட்டங்களை அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். அதேபோல ஆறு வயது குழந்தைகளுக்கும் அவர்களது தாய்மார்களுக்கும் சரியான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதற்கு முன் தினம் நடைப்பெற்ற மகளிரணி பேரணியில் கலந்துகொண்டு பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்த வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் 4 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியை தக்க வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பா.ஜ.க மகளிரணி நிர்வாகிகள்

உத்தரப்பிரதேசத்தில் இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவி ஏற்பது பெருமை. அவருக்கு எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். புதுச்சேரியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. தென்னிந்தியாவில் கர்நாடகாவுக்குப் பிறகு புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பிடித்துள்ளது. பா.ஜ.க-வின் இந்த வெற்றிக்காற்று தமிழகம், ஆந்திரம், தெலங்கானா எனப் பல்வேறு பகுதிகளுக்கும் வரக்கூடிய காலம் விரைவில் வரும். 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்டப் பேரவையில் இடம் பெற்றுள்ளோம்.

எங்கள் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை மேலும் வளருமே தவிர ஒருபோதும் தொய்வடைய போவதில்லை. வருகின்ற காலத்தில் மற்ற மாநிலங்களில் எங்களுடைய ஆட்சி வரப்போகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலை வாய்ப்பு, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு செல்வதாக பலர் வாழ்த்துச் சொன்னார்கள். அதே நோக்கத்தில் பிரதமர் மோடி பல்வேறு நாடுகளுக்குச் சென்றபோது இவர்கள் விமர்சித்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் பல நாடுகளுக்கும் செல்ல வேண்டும் என்றும் அதிக முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவே முதல்வர் மு.க.ஸ்டாலின் யோசிப்பதாக சொல்கிறார்கள்.

பிரதமர் மோடி – முதல்வர் ஸ்டாலின்

அதேபோல ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சிக்கே பிரதமர் செயல்படுவதாக நான் நினைவு கூர்ந்தேன். தமிழக முதல்வர் தமிழக பெருமைகளை வெளியே எடுத்துச் செல்வது எல்லோருக்கும் பெருமை. ஆனால் ஒட்டுமொத்தமாக இந்தியா முன்னேற வேண்டுமென என்கின்ற எண்ணத்துடன் அவர்கள் செயல்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை.

எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தேசிய ஒற்றுமைக்கு எதிராக பேசுவது, செயல்படுவதையே அவர்கள் குறிக்கோளாக கொண்டிருப்பது வேதனையாக உள்ளது. பாலியல் ரீதியான குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. பொள்ளாச்சி சம்பவத்தின்போதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல் முறையாக மனு அளித்து வலியுறுத்தினேன்.

பெண்களுக்கு எதிரான கொடுமையான சம்பவம் மீண்டும் நடக்கக் கூடாது என்றே நினைக்கிறோம். பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் புகார் கொடுக்க முன்வராமல் இருப்பதற்கு நம்முடைய சமுதாயத்தில் இருக்கின்ற பல்வேறு தடைகளை நாம் மாற்றியாக வேண்டும். தமிழக சட்டப் பேரவையில், பெண் உறுப்பினர்களுக்கு தனி இருக்கை வழங்க வேண்டுமென பேரவைத் தலைவரிடம் வலியுறுத்திப் பேசினேன். முதலில் நாம் பாலின சமத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். மாற்றம் சட்டப்பேரவையிலிருந்தே வர வேண்டும். பாலின சமத்துவம் அனைத்து இடங்களிலும் வேண்டும். உணர்வுகளை புரிந்து செயல்பட வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.