சென்னை: போக்சோ வழக்கில் கைதான போலீஸ் எஸ்.ஐ மகன் – 13 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்

சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் `தனக்கு 13 வயதில் ஒரு மகளும் நான்கு வயதில் ஒரு மகனும் உள்ளனர். என்னுடைய கணவர் குடும்பத்தைப் பிரிந்து சென்றுவிட்டார். இந்தநிலையில் தன்னுடைய மகளின் செயல்பாடுகளில் சந்தேகம் உள்ளது. அதனால் அவரை அழைத்து விசாரணை செய்ய வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி கடந்த 19-ம் தேதி மாலை வீட்டை விட்டுச் சென்று மறுநாள் 20-ம் தேதி காலை வீட்டிற்கு வந்துள்ளது தெரியவந்தது.

பாலியல் வன்கொடுமை

இதையடுத்து சிறுமியிடம் அன்றைய தினம் எங்குச் சென்றாய் என்று போலீஸார் விசாரித்தபோது அவர் கூறிய தகவல் அவளின் அம்மாவை அதிர்ச்சியடைய வைத்தது. சிறுமி அளித்த தகவலின்பேரில் திருவள்ளூர் மாவட்டம், காரனோடை ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜீவன் (20) என்பவரிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், “ஜீவனின் தந்தை சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். மேலும் ஜீவனின் பாட்டி வீடு புளியந்தோப்பில் உள்ளது.

அதனால் அங்கு அடிக்கடி வந்தபோது 13 வயது சிறுமியுடன் ஜீவனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிறுமியை ஜீவன் காதலிப்பதாகக் கூறியுள்ளார். பின்னர் கடந்த 19-ம் தேதி இரவு சிறுமியை அழைத்துச் சென்ற ஜீவன், அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மகளைக் காணாததால் அவரின் அம்மா அந்தப்பகுதியில் தேடியுள்ளார். இந்தச் சமயத்தில் மறுநாள் வீட்டுக்கு வந்த மகளிடம் எங்குச் சென்றாய் என்று அவளின் அம்மா கேட்டுள்ளார். அதற்கு சிறுமி மழுப்பலான பதிலைக் கூறியுள்ளார்.

கைது

அதனால் சந்தேகமடைந்த சிறுமியின் அம்மா, காவல் நிலையத்தில் புகாரளித்தார். சிறுமியிடம் விசாரித்தபோதுதான் ஜீவனுடன் அவள் சென்ற விவரம் தெரியவந்தது. இதையடுத்து ஜீவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளோம். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை, கவுன்சலிங் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்குப்பிறகு ஜீவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.