அமெரிக்காவின் அழுத்தத்தால் இந்தியா உடனான உறவு பாதிக்காது: ரஷ்ய வெளியுறவு அமைச்சர்| Dinamalar

புதுடில்லி: இந்தியா மீது அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதால் இந்திய – ரஷ்ய உறவுகள் பாதிக்கப்படாது என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டில்லி வந்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல தசாப்தங்களாக இந்தியாவுடனான உறவு வளர்ந்து வருகின்றன. உறவுகள் என்பது மூலோபாய கூட்டாண்மைகள். இதன் அடிப்படையில்தான் நாங்கள் அனைத்து துறைகளிலும் எங்கள் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறோம். உக்ரைன் நெருக்கடியை இந்தியா முழுவதுமாக உற்று நோக்குகிறது. போருக்கு பின் உக்ரைன் அமைதியான நாடாக இருக்கும் என நம்புகிறேன். இந்தியாவின் வெளியுறவு கொள்கைகள் சுதந்திரம் மற்றும் உண்மையான தேச நலன்களில் கவனம் செலுத்துதலை கொண்டுள்ளது.

ரஷ்யாவிடம் இந்தியா வாங்க விரும்பும் எந்த பொருளையும் இந்தியாவுக்கு வழங்க தயாராக இருக்கிறோம். இது குறித்து விவாதிக்கவும் தயார். ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் நல்ல உறவுகள் உள்ளன. உக்ரைன் உடனான போர், ராணுவ உள்கட்டமைப்பை குறிவைக்கும் ஒரு சிறப்பு நடவடிக்கை. ரஷ்யாவிற்கு அச்சுறுத்தலை முன்வைக்கும் கீவ் நகரில் உள்ள ஆட்சி அதிகாரத்தை பறிப்பதே இதன் நோக்கம். இந்தியா மீது அமெரிக்காவின் அழுத்தத்தால் இந்திய – ரஷ்ய உறவுகள் பாதிக்கப்படாது. அவர்கள் (அமெரிக்கா) மற்ற நாடுகளை தங்கள் அரசியலை பின்பற்றும்படி வற்புறுத்துகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.