அமைதி பேச்சுவார்த்தை தொடரும்: ரஷ்யா, உக்ரைன் பிரதிநிதிகள் அறிவிப்பு

கீவ்: ரஷ்யா, உக்ரைன் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை தொடரும்என்று இரு நாடுகளும் அறிவித்துள்ளன.

கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகளிடையே போர் தீவிரமடைந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி முயற்சி செய்து வருகிறது. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ரஷ்யா, உக்ரைன் பிரதிநிதிகள் அண்மையில் சந்தித்துப் பேசினர். அப்போது தலைநகர் கீவ், செர்னிஹிவ் நகரங்களில் படைகளை குறைக்க ரஷ்யா ஒப்புக் கொண்டது. இதன் ஒரு பகுதியாக மேரிபோல் நகரில் ரஷ்ய ராணுவம் நேற்று சண்டை நிறுத்தத்தை அமல் செய்தது. அந்த நகரில் சிக்கித் தவித்த பலர் பாதுகாப்பாக வெளியேறினர்.

இதனிடையே, உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் டேவிட் நிருபர்களிடம் கூறும்போது, “ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரஷ்யாவுடன் காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இதில் உடன்பாடு எட்டப்பட்டால் இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்துப் பேசுவார்கள்” என்று தெரிவித்தார்.

ரஷ்ய அமைதி பேச்சுவார்த்தை குழு தலைவர் விளாடிமிர் மெடின்ஸ்கை கூறும்போது, “நேட்டோவில் இணைய மாட்டோம், அணு ஆயுதங்களை தயாரிக்க மாட்டோம் என்று உக்ரைன் உறுதிஅளித்துள்ளது. பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லஉக்ரைன் விருப்பம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும்” என்றார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ஏற் கெனவே அறிவித்தபடி உக்ரைனுக்கு ரூ.3,794 கோடி நிதி யுதவி வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு இதுவரை ரூ.15,000 கோடியில் ஆயுதங்கள், நிவாரணங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.

ரஷ்ய அமைச்சர் வருகை

இதனிடையே ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவ் 2 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தார். பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேச உள்ளார். அப்போது பாதுகாப்பு, வர்த்தகம் குறித்து முக்கியபேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

பிரிட்டன் அமைச்சர்

இதனிடையே பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸும்நேற்று அரசு முறை பயணமாக டெல்லி வந்தார். இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை அவர் சந்தித்துப் பேசினார். மேலும் சில தலைவர்களை இன்றுசந்தித்து பேச்சுவார்த்தை நடத்தஉள்ளார். உக்ரைன் விவகாரத்தில் நடுநிலை வகித்து வரும் இந்தியாவை தங்கள் பக்கம் இழுக்க அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தீவிர முயற்சி செய்து வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.