இலங்கை அதிபர் மாளிகை முற்றுகையிட்ட விவகாரம் – பெண் உள்பட 45 பேர் கைது

கொழும்பு :
இலங்கையில் வரலாறு காணாத அளவு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. பெட்ரோல் நிலையங்களில் பல மணி நேரம் மக்கள் காத்துக்கிடக்கும் நிலை உருவாகி உள்ளது. 
மின் உற்பத்திக்காக அனல்மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காததால் மின் விநியோகத்தில் 750 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொழும்பு நகரில் நாள் ஒன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டு காணப்படுகிறது. 
 
இதற்கிடையே, பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு, மின்வெட்டு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை நேற்று முற்றுகையிட்டனர். உடனே அவர் பதவி விலகவேண்டும் என கோஷமிட்டனர்.
இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியதால், போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது. மேலும், கொழும்பு நகரின் வடக்கு, தெற்கு மற்றும் மத்திய நுகேகொட காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது. 
இந்நிலையில், இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட விவகாரத்தில் ஒரு பெண் உள்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.