சோபியான் என்கவுண்டர்- லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதியை சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படை

ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று கடும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது.
சோபியான் மாவட்டம் துர்க்வாங்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பாதுகாப்பு படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். 
அவனது உடல் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டது. அவன், டாக் மொகல்லா சோபியான் பகுதியைச் சேர்ந்த முனிப் அகமது ஷேக் என்பதும், லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது. காவல்துறை ஆவணங்களின்படி, கொல்லப்பட்ட பயங்கரவாதி, போலீஸ்/பாதுகாப்புப் படைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் பொதுமக்கள் மீதான அட்டூழியங்கள் உட்பட பல பயங்கரவாத குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குழுக்களில் இடம்பெற்றுள்ளான், காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
என்கவுண்டர் நடந்த இடத்திலிருந்து சீன துப்பாக்கி, ஒரு மேகசின் மற்றும் ஐந்து குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.