மிரிஹான சம்பவம்: பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது

மிரிஹான பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நாட்டில் காணப்படும் குற்றவியல் தண்டனை சட்டக்கோவை மற்றும் பொது சொத்துக்கள் தொடர்பான சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மிரிஹான பகுதியில் நேற்று (31) இடம்பெற்ற சம்பவம் அதாடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ,இந்தச் சம்பவம் தொடர்பில் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தின் போது, சுமார் 39 மில்லியன் ரூபா சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பல மணித்தியாலங்கள் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டதாகவும், நிலைமை எல்லை மீறியதன் பின்னரே குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்த வேண்டி ஏற்பட்டது. மாலை 6 மணியளவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், இரவு 10.30 க்கு பின்னரே நிலைமை மோசமடைந்தது.

நிலைமையை கட்டுப்படுத்த சட்டத்தில் காணப்பட்ட கட்டளைகளை பயன்படுத்த நேரிட்டதாகவும், அதற்கமைய, முதலில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அதன் பின்னரே நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் வாகனங்களுக்கு தீ மூட்டியதன் பின்னரே இந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. 24 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 18 பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.