யுகாதி பண்டிகையையொட்டி திருப்பதி கோவிலில் நாளை பஞ்சாங்கம் வாசிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி கடந்த மாதம் 29-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.

இதையொட்டி காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவில் முழுவதும் தூய்மை செய்து வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டன.

கோவில் பிரகாரம் முழுவதும் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வந்த பல வண்ண மலர்கள் மற்றும் பழ வகைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோவில் கோபுரம் மற்றும் வெளி பகுதிகளில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இரவு நேரங்களில் ஜொலிக்கிறது.

தெலுங்கு வருட பிறப்பையொட்டி நாளை அதிகாலை ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

இதையடுத்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுப்ரபாதம், தோமாலை அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் நடைபெறுகிறது.

நாளை ஏழுமலையான் முன்பு புதிய பஞ்சாங்கம் படிக்கப்படுகிறது. வார இறுதி நாட்களில் இலவச தரிசனத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது.

நாளை சனிக்கிழமை தெலுங்கு வருடப்பிறப்பு என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருப்பதியில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.

பக்தர்களுக்கு விநியோகிக்க கூடுதலாக லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் நேற்று 54,273 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 28,089 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.08 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

திருமலையில் உள்ள பி.ஏ.சி-1ல் 2 கவுண்ட்டர்களில் தினமும் 750 அங்கப்பிரதட்சண டோக்கன்கள் நேற்று முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த டோக்கன்கள் வழங்கும் தேதி ஒத்தி வைக்கப்பட்டு, நாளை (சனிக்கிழமை) மதியம் 2 மணியில் இருந்து வழங்கப்படும், என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.