பாலியல் இச்சைக்கு உடன்படாததால் ஆத்திரம்; தம்பியின் மனைவி, குழந்தையை கொன்று எரித்த கொடூர அண்ணன்!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மலையூர் அடுத்த வலசு பகுதியைச் சேர்ந்தவர் நல்லப்பிச்சன். இவருக்குக் கருப்பையா, சிவக்குமார் என 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் கருப்பையாவிற்குத் திருமணம் ஆகவில்லை, சிவக்குமாருக்குத் திருமணமாகி விட்டது. அவர் மனைவி பெயர் அஞ்சலை (21). இந்தத் தம்பதிக்கு 2 வயதில் மலர்விழி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், அஞ்சலை 4 மாத கர்ப்பமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்றைய தினம், சிவக்குமார் புளியம்பழம் வியாபாரம் செய்வதற்காக வெளியூர் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. மாலை நேரத்தில் அஞ்சலை அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது, அந்தப் பகுதிக்கு விறகு வெட்ட வந்த சிவக்குமாரின் சகோதரர் கருப்பையா அஞ்சலையிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றிருக்கிறார். அதற்கு, அஞ்சலை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கொலையாளி கருப்பையா

அதனால் ஆத்திரமடைந்த கருப்பையா அஞ்சலையை அரிவாளால் வெட்டி கொலை செய்திருக்கிறார். உடனிருந்த அஞ்சலையின் 2 வயது பெண் குழந்தை அழவே, அதையும் கொலை செய்து இருவர் உடல்களையும் தீ வைத்து எரித்ததாகக் கூறப்படுகிறது. தோட்டத்துப் பகுதியிலிருந்து புகை வருவதைப் பார்த்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நத்தம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற நத்தம் காவல் ஆய்வாளர் ராஜமுரளி உள்ளிட்ட போலீஸார் விசாரணை செய்ததில் கருப்பையா கொலை செய்தது தெரியவந்தது. அதையடுத்து, கருப்பையாவைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கைது

தம்பியின் மனைவி, குழந்தையை அண்ணன் கொலை செய்து தீ வைத்து எரித்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.