மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்வு: புதுச்சேரியில் அமல்

புதுச்சேரி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இதற்கான உத்தரவு அனைத்து அரசு துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. நாடு முழுவதும் கரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2020ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. ஓராண்டுக்கு பிறகு கடந்த 2021ல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டது.

அதாவது 11 சதவீதம் அகவிலைப்படி உயர்வானது மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இது நடைமுறைக்கு வந்தது. பின்னர் மீண்டும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதன்மூலம் 28 சதவீதம் அகவிலைப்படியானது 31 சதவீதமாக கடந்த அக்டோபரில் அமலுக்கு வந்தது.

இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கடந்த 1.1.2022 முதல் 3 சதவீதம் உயர்ந்தது. அதன்படி 34 சதவீதமானது. இது புதுச்சேரியிலும் கடந்த ஜனவரி 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு அமலுக்கு வந்துள்ளதாக நிதித்துறை சார்பு செயலர் கோவிந்தராஜன் இன்று அனைத்து செயலர்களுக்கும், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய அனைத்து பிராந்தியத் தலைமைக்கும், துறைகளின் தலைவர்களுக்கும் அனுப்பியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.