பிர்பும் கலவரம் | மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 பேரை மும்பையில் கைது செய்தது சிபிஐ

ராம்பூர்ஹாட்: பிர்பும் கொலையில் தொடர்புடையதாக கூறப்படும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நான்கு பேரை சிபிஐ போலீசார் மும்பையில் வைத்து இன்று கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, “பிர்பும் அருகே கொலை நடந்த உடனேயே குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் போக்டுயில் இருந்து மும்பைக்குத் தப்பி ஓடிவிட்டனர். மறைவிடத்தில் பதுங்கி இருந்த அவர்கள் இன்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரில், முதல் தகவல் அறிக்கையில் உள்ள பாப்பா, ஷாபு ஷேக் ஆகிய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்பு மேற்கு வங்கத்திற்கு அழைத்து சென்று காவலில் வைக்க மனு செய்வோம்” என்றார்.

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் அருகே ஆளுங்கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து துணைத் தலைவர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை, உயர் நீதிமன்றம் மார்ச் 21-ம் தேதி சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. சிபிஐ வசம் வழக்குச் சென்ற பின்னர் நடக்கும் முதல் கைது நடவடிக்கை இதுவாகும். அதற்கு முன்பாக மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு இந்த வழக்கை விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.