மராட்டிய முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக்கின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை..!

மும்பை, 
மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னாள் உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் மீது ரூ.100 கோடி மாமூல் புகாரை கூறினார். இந்த புகார் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இதனைத்தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அனில் தேஷ்முக் மற்றும் அவரது தனிச்செயலாளர் சஞ்சீவ் பாலன்டே, நேர்முக உதவியாளர் குந்தன் ஷிண்டே ஆகியோரும் கைது செய்யப்பட்டு ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே ரூ.100 கோடி மாமூல் வழக்கில் அனில்தேஷ்முக் உள்ளிட்டவர்களை விசாரிக்க சி.பி.ஐ. கோர்ட்டில் அனுமதி வாங்கியது. கடந்த திங்கட்கிழமை சி.பி.ஐ. அதிகாரிகள் அனில்தேஷ்முக்கை காவலில் எடுத்து விசாரிக்க ஆர்தர் ரோடு சிறை சென்றனர். அப்போது அவர் தோள்பட்டை வலி என கூறி ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சி.பி.ஐ.யால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை. 
இந்தசூழலில், அனில் தேஷ்முக்கை விசாரிக்க ஆர்தர் ரோடு ஜெயிலில் இருந்து சி.பி.ஐ., காவலில் எடுத்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சி.பி.ஐ. அவரை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அதன் பின்னர் வழக்கு குறித்து வருகிற 11-ந் தேதி வரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு கோர்ட்டு அனுமதி வழங்கி இருந்தது. 
இந்நிலையில் மராட்டிய முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக்கின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மும்பை ஐகோர்ட்டில் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.