கர்நாடகாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்: ஏ.சி.வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

கர்நாடகாவில் ஏ.சி.வெடித்து, வீடு தீப்பற்றி எரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயா நகர் மாவட்டம், ஹோஸபேட்டே தாலுகாவின் மாரியம்மன ஹள்ளியின் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட் பிரஷாந்த் (42). இவருடைய மனைவி சந்திரகலா (38). இந்த தம்பதிக்கு எஸ் ஏ அர்த்விக் (16) என்ற மகனும், ப்ரேரனா (8) என்ற மகளும் இருந்தனர். இவர்கள் ராகவேந்திரா ஷெட்டி என்பவரின் வீட்டில் வசித்து வந்த நிலையில், இன்று அதிகாலை எதிர்பாராத வகையில் திடீரென ஏசி வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
ஏ.சி. வெடித்ததில் வீடு முழுக்க தீ மளமளவென பற்றிக்கொண்டு கரும் புகை சூழ்ந்துள்ளது. இதனைப் பார்த்த ராகவேந்திரா ஷெட்டி மற்றும் அவருடைய மனைவி ராஜஸ்ரீ இருவரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர். ஆனால் வெங்கட் பிரஷாந்த், அவருடைய மனைவி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் வெளியே வர முடியாமல் தீயில் சிக்கி உயிருடன் எரிந்தது நெஞ்சை பதற வைத்துள்ளது.
image
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு ஊழியர்கள், போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ஹோஸபேட்டே அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
மின்கசிவால் ஏசி வெடித்ததுடன், தீயால் ஏற்பட்ட புகையில் மூச்சுத் திணறி வெங்கட் பிரசாத் குடும்பத்தினர் உயிரிழந்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்து நடந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்தது இந்த விபத்துக்கான காரணமா என மரியம்மன ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.