சேலம்: கை மாறிய பணம்; அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி! – அதிமுக நிர்வாகி மீது புகார்

சேலம் ஆத்தூர், கல்லாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். எம்.ஏ.,பி.எட்., பட்டதாரியான இவரிடம், அதேப் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., ஒன்றிய விவசாயி அணி செயலாளர் சுரேஷ் என்பவர், மத்திய கூட்டுறவுத் துறையில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம், 4,70,000 ரூபாய் வாங்கியுள்ளாராம். ஒரு வருடமாகியும் சுரேஷ் வேலை தொடர்பாக எந்தவித முயற்சியும் எடுக்காததால், தான்கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார் கண்ணன். அதற்கு சுரேஷ் வீடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்ததுடன், அடிதடியிலும் ஈடுப்பட்டுள்ளார் என ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கண்ணன்

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட கண்ணனிடம் பேசினோம். “எனக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்காங்க. என்னோட தோட்டத்தொரவயெல்லாம் வித்து, வட்டிக்கு வாங்கிதான் வேலைக்கு பணம் ரெடி பண்ணிக் கொடுத்தேன். இன்னைக்கு கொடுத்த பணத்த வாங்க முடியாம கடனாளியா நிக்கிறேன். 2 டிகிரி படிச்சு முடிச்சிருக்கேன். அரசு வேலைக்கு போகணும் என்கிற ஆசையில பல முறை தேர்வுகள் எழுதிருக்கேன். ஆனா, அதுல என்னால பாஸ் பண்ண முடியல. இதுக்கு இடையில கல்யாணமாகி குடும்பம் பிள்ளைங்கனு வந்ததால குடும்பத்த காப்பாத்துனம்ணு, எங்களுக்கு சொந்தமா இருக்குற நிலத்துல விவசாயம் செஞ்சுட்டுருக்கேன்.

கடந்த 2020-ல அ.தி.மு.க., ஆட்சி இருந்தப்போ எங்க ஊரு அ.தி.மு.க., விவசாய அணி செயலாளர் சுரேஷ் என்னிடம் பேசினார். அப்போது அவர், “ஏன்டா படிச்சிட்டு பச்ச புள்ளைங்கள வச்சிக்கிட்டு கஷ்டப்படுற… ஒழுங்க அரசு வேலைக்கு போலாம்ல, ஊருல உள்ளவங்களுக்கெல்லாம் வேலை வாங்கி தந்துட்டு இருக்கேன், உனக்கு கொடுக்கமாட்டேனா’ என்று வசியமாக பேசியவரின் வார்த்தையை கேட்டு அதில் விழுந்தேன். அவர் பணம் கொஞ்சம் செலவாகும். ஒரு பத்து லட்சம் ரெடி பண்ணுனு சொன்னாரு. என்னிடம் அவ்வளவு பணம் இல்லங்க, இப்போதைக்கு என்னால முடிஞ்சத ரெடி பண்ணி தாரேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கொடுத்துடுறேன்னு சொன்னேன். அப்படி கொஞ்சம் கொஞ்சமா 4 லட்சத்து, 70 ஆயிரம் ரூபாய் 3 தவணையாக கொடுத்திருந்தேன். இதற்கிடையில எனக்கு தெரிஞ்ச நண்பர் ஒருவரும் அவருக்கும் வேலைக்கு ரெடி பண்ணித்தர சொன்னாரு, அதனால அவருக்கும் கூட்டுறவுல வேலை வாங்கித்தர சொல்லி 4 லட்ச ரூபாய் சுரேஷிடம் கொடுத்தோம்.

புகார் மனு

ஆனால் ஒரு வருடமாகியும், அவர் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. அதனால் கொடுத்த பணத்தை திருப்பி தரக்கூறி சுரேஷிடம் கேட்டோம். அதற்கு அவர், `பணத்தலாம் தர முடியாது, நீ என்கிட்ட பணம் தரல உன்னால முடிஞ்சத பாத்துக்கோ’ என்றார். இதனால் ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் சுரேஷ் மீது புகார் அளித்தேன். அதற்கு, `யாரு மேலடா புகார் கொடுத்திருக்க’ என்று என் வீட்டிற்குள் வந்து கொலை வெறி தாக்குதல் செய்தார். என்னை வீடு புகுந்து தாக்கியதால் மீண்டும் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தேன். ஆனால் இதுவரை அதற்கு எந்தவித நடவடிக்கையும் இல்லை. மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் அளித்திருந்தேன். அதன்மூலம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திலிருந்து காவல் உதவி ஆய்வாளர் தமிழரசன் என்பவர் விசாரணைக்கு நேரில் வருமாறு கூறியிருந்தார்.

நான் நேரில் சென்று நடந்தவற்றை கூறினேன். பின்னர் அந்த எஸ்.ஐ., தனது செல்போனிலிருந்து சுரேஷுக்கு கால் செய்து விசாரணைக்கு ஆஜராக வரச் சொன்னார். திங்கள்கிழமை விசாரணைக்கு எஸ்.பி., ஆபிஸுக்கு நான் போயிருந்தேன். காலை 10 மணியில இருந்து சாயங்காலம் 4.30 மணிவரைக்கும் காத்திருந்தேன். விசாரணைக்கு கடைசி வரைக்கும் சுரேஷ் வரல. விசாரணை செய்த எஸ்.ஐ., `சரிப்பா நீ வீட்டுக்கு கிளம்பு, நான் அவனுக்கு சம்மன் அனுப்பிக்கிறே’னு சாக்கு சொல்லி என்னை அனுப்பினார்.

இந்நிலையில் மீண்டும் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அப்போது என்னோட புகாரை விசாரித்த எஸ்.எஸ்.ஐ., ராஜதுரை நேரில் சுரேஷை வரவழைத்தார். விசாரணைக்கு வந்த சுரேஷ், “பணம் வாங்குனது உண்மைதான். ஆனா, என்கிட்ட இப்ப பணம் இல்ல, அது அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரஞ்சித்குமார்கிட்ட இருக்கு… எதுவாக இருந்தாலும் அவர்கிட்ட கேட்டுக்குங்க, எனக்கு தெரியாது” என்று சொல்லிட்டு போலீஸ் ஸ்டேசன கூட மதிக்காம கிளம்பிட்டார்.

பின்னர் ஒன்றியச் செயலாளர் ரஞ்சித் குமாரிடம் சென்று கேட்டேன். அதற்கு அவர், `தம்பி நான் பணம் வாங்குனதுலாம் உண்மைதான். ஆனா உன்னோட விஷயத்திற்காக நான் பணம் வாங்கல, அவனும் உன்னோட பெயரச் சொல்லி கொடுக்கல, அதனால இனி என்ன பாக்க என் வீட்டுக்கு வர வேல வச்சிகாத’னு சொல்லி அனுப்பினார்.

இந்நிலையில என்னோட பணம் மட்டும் இல்லாம… என்னோட நண்பர் பணமும் சுரேஷ்கிட்ட மாட்டிக்கிட்டு இருக்கிறதனால அவரு உன்ன நம்பிதானே கொடுத்தேன்னு என்னோட கழுத்த பிடிக்கிறாரு. நான் என்ன பண்ணுறதுனே தெரியலங்க குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கிறத தவிர வேற வழி இல்லங்க” என்று புலம்பினார்.

இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு எஸ்.ஐ., தமிழரசனிடம் பேசினோம். “புகார் வந்ததின் பேரில் இரு தரப்பையும் அழைத்து விசாரிக்க சம்மன் அனுப்பியிருக்கோம். ஆனா சுரேஷ் வரல, கண்ணணும் லோக்கல் ஸ்டேசன்ல பேச்சுவார்த்தைக்கு கூப்புடுறாங்க, பேசிட்டு சொல்றேன்னு சொன்னாரு, அதனால நாங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம்” என்றார்.

மேலும் இதுகுறித்து விசாரணை செய்த ஆத்தூர் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., ராஜதுரையிடம் பேசினோம். “பணத்துக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லைனு அப்பவே சுரேஷ் எழுதிக்கொடுத்துட்டு போய்ட்டாரு” என்றார். அதையடுத்து அவரிடம், “உங்க விசாரணையில சுரேஷ் பணம் வாங்குனது உண்மை தான்னு தெரிய வந்துதா” என்று கேட்டோம். அதற்கு அவர், “பணம் ஒன்றியத்துகிட்ட கண்ணன் கொடுக்கிறப்போ சுரேஷ் கூட இருந்ததா சொல்றாரு. மத்தப்படி அவருக்கு ஒன்னும் தெரியாதாம்” என்றார்.

சுரேஷ்

இதுகுறித்து ஆத்தூர் டி.எஸ்.பி.,ராமச்சந்திரனிடம் பேசினோம், “நீங்க சொல்ற மாதிரி எந்த புகாரும் என்னுடைய பார்வைக்கு வரவில்லை. என் பார்வைக்கு வராத புகாரைப் பற்றி நான் பேச விரும்பவில்லை” என்றார்.

இதுகுறித்து சுரேஷை தொடர்புக்கொண்டபோது நமது அழைப்பை ஏற்காமல் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்.

மேலும் சம்பந்தப்பட்ட ஒன்றியச் செயலாளர் ரஞ்சித்குமாரிடம் பேசினோம், நமது அழைப்பை எடுத்து பேசியவரிடம் கள்ளாநத்தம் சுரேஷை தெரியுமா என்று கேட்டதற்கு, அவர், டவர் கிடைக்கல. வேரொரு நம்பர்ல இருந்து வறேன் சொன்னவரு கடைசி வரைக்கும் வரவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.