நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் இலங்கை எதிர்கட்சி தலைவர் எச்சரிக்கை| Dinamalar

கொழும்பு:”இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் படும் அவதிக்கு தீர்வு காணவில்லை எனில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும்,” என, அந்நாட்டின் பிரதான எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா எச்சரித்துள்ளார்.

நம் அண்டை நாடான இலங்கையில்,அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அந்நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர அனைத்து அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்தனர். அனைத்து கட்சியினர் அடங்கிய கூட்டு அமைச்சரவை அமைக்கும் ஆலோசனையை ஏற்க எதிர்கட்சிகள் மறுத்துவிட்டன.

இந்நிலையில், நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், சர்வதேச நிதியத்தில் இருந்து பிணைக்கடன் பெறவும், பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவை இலங்கை அரசு அமைத்தது.இந்நிலையில், பிரதான எதிர்கட்சி தலைவரும், சமாகி ஜன பாலவேகயா கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசா அந்நாட்டு பார்லி.,யில் கூறியதாவது:
இலங்கையில் அதிபருக்கான ஆட்சி அதிகாரம் நீக்கப்பட்டு, அதிகாரிகள், பார்லிமென்ட், நீதித்துறை ஆகியவற்றுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். அதிபரும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என்ற மக்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை எனில், அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம்.கோத்தபய அதிபராக தொடரும் வரை இடைக்கால அரசு அமைய ஒப்புக் கொள்ளமாட்டோம். அதிபரை பதவி நீக்கம் செய்யவும் தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, சமாகி ஜன பாலவேகயா கட்சியின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை பார்லி.,யில் சஜித் பிரேமதாசா நேற்று சமர்ப்பித்தார். மேலும், அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெறும் பணியும் நடந்து வருகிறது.

மீண்டும் பொறுப்பேற்றார் நிதி அமைச்சர்!

இலங்கையின் நிதி அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த பசில் ராஜபக்சேவை அவரது சகோதரரும், அதிபருமான கோத்தபய ராஜபக்சே சமீபத்தில் பதவி நீக்கம் செய்தார். இதையடுத்து, சட்ட அமைச்சராக இருந்த அலி சப்ரி, புதிய நிதி அமைச்சராக நியமிக்கப் பட்டார். இவர் பதவி ஏற்ற 24 மணி நேரத்தில் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், அந்நாட்டு பார்லியில் அலி சப்ரி கூறியதாவது:இந்த பொறுப்பை, என்னை விட தகுதியானவர் நிர்வகிக்க வேண்டும் என்ற காரணத்தினால் ராஜினாமா செய்தேன். இன்று வரை, வேறு யாரும் இந்த பொறுப்பை ஏற்க முன்வராததை அடுத்து மீண்டும் நிதி அமைச்சர் பதவியை ஏற்க முடிவெடுத்துள்ளேன். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.