நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் – ஜெகன்மோகன் ரெட்டி சர்ச்சை பேச்சு

ஐதராபாத்:
ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலுடன் சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. அப்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் தேர்தல் அறிக்கையில் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என ஜெகன்மோகன் ரெட்டி வாக்குறுதி அளித்திருந்தார்.
தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதற்கிடையே, கடந்த டிசம்பர் மாதம் அமைச்சரவை மாற்றி அமைக்க முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி முடிவுசெய்தார். கொரோனா தொற்றால் அமைச்சரவை மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் சமீபத்தில் அமராவதியில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்ட முடிவில் ஏற்கனவே கூறியபடி 24 அமைச்சர்களிடமிருந்து ராஜினாமா கடிதங்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பெற்றுக் கொண்டார்.
வரும் 11-ம் தேதி ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். குறிப்பாக வீட்டுவசதித் திட்டம் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 
அப்போது அவர் பேசுகையில், எனது சொந்த உழைப்பால் நான் உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளேன். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என தெரிவித்தார். முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையானது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.