அனைத்து தரப்பு மக்களும் போராட்டம் – இந்தியா கொடுத்த கடன் பணமும் தீர்ந்ததால் இலங்கை திணறல்

கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடும் விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் பற்றாக்குறை, பல மணி நேரம் மின்சார வினியோகம் தடை ஆகியவற்றால் தவித்து வரும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று போராட்டங்கள் நடந்து வருகிறது. சமீபத்தில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் நீடித்து வந்தாலும் அதிபர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என்று கோத்தபய ராஜபக்சே அறிவித்தார்.
மேலும் பொருளாதார நெருக்கடியை சமாளித்த இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் எதுவும் பலன் தரவில்லை. அங்கு நிலைமை மோசமாகி கொண்டே செல்கிறது.
ஆனால் மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மக்கள் தினமும் வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள். அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினார்கள்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்துள்ளது.
இதையடுத்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். பல்கலைக் கழக மாணவர்கள் இலங்கை அரசை கண்டித்து கல்லூரிகளில் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினார்கள். அவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டியடித்தனர்.
அரசு நிர்வாகம் முடங்கி இருப்பதால் அரசு ஊழியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இலங்கையில் நெருக்கடி நிலை அதிகரித்து வருவது அனைத்து தரப்பு மக்களை போராட்டத்தில் ஈடுபட தள்ளியுள்ளது. இதனால் வரும் நாட்களில் போராட்டங்கள் மேலும் வலுவடையும் சூழல் உருவாகி இருக்கிறது.
கொழும்பு- காலி முகத்திடல் மைதானத்தில் இன்று போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். அதை தடுப்பதற்காக போலீஸ் சிறப்பு அதிரடி படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
போலீசாரும் ஏனைய ராணுவத்தினரும் பாதுகாப்பு வழங்குவதற்காக கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுபற்றி போலீஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, போராட்டக்காரர்கள் கலவரமாக நடந்து கொள்ளாமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினால் எந்த பிரச்சினையும் இருக்காது.
ஜனாதிபதி செயலகம் அல்லது பிரதமர் இல்லத்துக்குள் நுழைய முயற்சித்தால், தடுத்து நிறுத்துவோம் என்றும் தெரிவித்தார். கொழும்பின் பல தேவாலயங்களுக்கு முன்பு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
கொழும்பு- கிராண்ட்பாஸ் புனித சூசையப்பர் தேவாலயத்தின் முன்பு மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாயலத்திற்கு முன்பாக போராட்டம் நடந்தது.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை அரசு, இந்தியாவிடம் உதவி கேட்டது. இதை ஏற்று இந்தியா உதவி செய்ய முன் வந்தது. இலங்கையில் பொதுப்போக்குவரத்துக்கு டீசல்தான் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இலங்கை எரிபொருள் வாங்குவதற்கு இந்தியா கடனுதவியை வழங்கியது.
இந்தியா அளித்த கடன் வேகமாக தீர்ந்து வருவதால் இலங்கையில் இம்மாத இறுதியில் டீசல் இல்லாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து இலங்கை அதிகாரிகள் கூறும்போது, இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஏப்ரல் 1-ந் தேதி எரிபொருள் வர இருந்தது. ஆனால் அவசரம் கருதி மார்ச் இறுதியில் இருந்தே எரிபொருள் வரத் தொடங்கியது. வருகிற 15, 18, 23 ஆகிய தேதிகளில் இந்தியாவில் இருந்து கூடுதலாக எரிபொருள் வர உள்ளது. அதற்குள் எரிபொருள் அனுப்புவதை நீட்டிக்குமாறு இந்தியாவிடம் இலங்கை அரசு கேட்கவில்லை என்றால் நாட்டில் எரிபொருள் முழுமையாக தீர்ந்துவிடும் என்றனர்.
இந்தியா வழங்கிய கடன் தீர்ந்து வருவதால் இலங்கை அரசு கடுமையாக திணறி வருகிறது. ஏற்கனவே மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாததால் அதிபர் கோத்தபய ராஜ பக்சேவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.