இந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது- கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி

கண்ணனூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23-வது தேசிய மாநாடு கேரள மாநிலம் கண்ணனூரில் நடைபெற்றது. தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் அழைப்பு விடுத்து இருந்தனர். அதை  ஏற்று தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கண்ணூர் மாநாட்டில் பங்கேற்றார்.
இந்த மாநாட்டில் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய அரசின் இந்திய திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று கூறினார்.  இந்தி திணிப்பு என்பது தேசிய ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் சிதைக்கும் முயற்சி என்றும் அவர் தெரிவித்தார். 
நாட்டின் முக்கிய எதிர்பார்ப்பு மையமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக தேசிய அளவில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்றும் மாநிலங்களில் அரசியல் சூழ்நிலையின் அடிப்படையில், கூட்டணி குறித்து முடிவெடுக்க மாநில தலைமையை அனுமதிப்பது என்றும் கண்ணூர் மார்க்சிஸ்ட் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் தொடக்க உரை நிகழ்த்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கூட்டணி அமைக்க அழைப்பு விடுத்தார். 
மதச்சார்பின்மை குறித்த தனது நிலைப்பாட்டை காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.