நடிகர் ஸ்மித்துக்கு 10 ஆண்டு தடை ஆஸ்கர் விருது குழு அறிவிப்பு| Dinamalar

லாஸ் ஏஞ்சலஸ்-ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், தொகுப்பாளரை அறைந்த பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், அடுத்த 10 ஆண்டு களுக்கு விழாக்களில் பங்கேற்க தடை விதித்து, ஆஸ்கர் விருது குழு அறிவித்துள்ளது.

ஹாலிவுட் திரைப்படத் துறையில் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது, திரைப்பட கலை மற்றும் அறிவியல் அகாடமி சார்பில் ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில், சிறந்த நடிகருக்கான விருது வில் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது. அப்போது, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய காமெடி நடிகர் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவியும், நடிகையுமான ஜடா பின்கட் குறித்து கிண்டலாக விமர்சித்தார். உடனே மேடை ஏறிய வில் ஸ்மித், கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்தார். இது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், அகாடமியின் இயக்குனர்கள் குழு கூட்டம் லாஸ் ஏஞ்சலசில் நேற்று முன்தினம் நடந்தது.இதில், வில் ஸ்மித் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.இதையடுத்து, அடுத்த 10 ஆண்டுகளுக்கு, ஆஸ்கர் விருது உட்பட அகாடமி நடத்தும் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க, வில் ஸ்மித்துக்கு தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டது.

அதே நேரத்தில் அவருக்கு வழங்கப்பட்ட சிறந்த நடிகருக்கான விருதை திரும்பப் பெறுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.வழக்கமாக ஒரு ஆண்டு விருது பெறுவோர், அதற்கடுத்த ஆண்டு நடக்கும் நிகழ்ச்சியில், விருதுகளை வழங்குவர். தற்போது வில் ஸ்மித்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் அடுத்தாண்டு நடக்கும் விழாவில் விருது வழங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.