நடிகை பலாத்கார வழக்கில் காவ்யா மாதவனுக்கும் தொடர்பு: ஆடியோ வெளியானதால் பரபரப்பு

திருவனந்தபுரம்: பிரபல நடிகை பலாத்கார சம்பவத்திற்கு சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக  நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். 85 நாள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திலீப் தற்போது  நிபந்தனை ஜாமீனில் உள்ளார். இந்தநிலையில் இந்தவழக்கு விசாரணை தற்போது  பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குற்றப்பிரிவு போலீசார் நடத்தி வரும் தொடர் விசாரணையில் நடிகர் திலீப்புக்கு எதிராக பல்வேறு முக்கிய தகவல்கள்  கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் 15ம் தேதிக்குள் தொடர் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் போலீசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் விசாரணையில் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதால் அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 3 மாதம் கால அவகாசம் வேண்டும் என்று போலீசார் கேட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் நீதிமன்றத்தில் அளித்த ஒரு மனுவுடன் விசாரணையின் போது கிடைத்த 6 ஆடியோ ஆவணங்களையும் போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இவை அனைத்தும் திலீப் மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனுக்கு எதிரானவை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இவர்கள் இருவர் மீதான பிடி இறுகியுள்ளது.  இந்நிலையில் நடிகை பலாத்கார வழக்கில் காவ்யா மாதவனுக்கும் தொடர்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு ஆடியோ வெளியானது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திலீப்பின் தங்கை கணவரான சூரஜும், போலீஸ் அதிகாரிகளை கொல்ல சதித்திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் 6வது நபராக சேர்க்கப்பட்டுள்ள திலீப்பின் நண்பரான சரத்தும் பேசும் ஆடியோவில் தான் பலாத்கார வழக்கில் காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறும் விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கிடையே நடிகை காவ்யா மாதவனிடம் நாளை (11ம் தேதி) விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என கருதப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.