புதுச்சேரி சட்டப்பேரவை செயலகத்துக்கு நிதி அதிகாரம்: பேரவைத் தலைவர் செல்வம் தகவல்

புதுச்சேரி: “பல ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி சட்டப்பேரவை செயலகத்துக்கு நிதி அதிகாரம் கிடைத்துள்ளது; இதனால் நிதி தொடர்பான கோப்புகளை சட்டப்பேரவை செயலகத்திலேயே செயல்படுத்த முடியும்” என்று சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “புதுச்சேரி சட்டப்பேரவையின் செயலருக்கு கடந்த 1981-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் துறை தலைவருக்கான நிதி அதிகாரங்களை பயன்படுத்துவதற்கான ஆணையை வழங்கியிருந்தது. இதுநாள் வரை புதுச்சேரி சட்டப்பேரவை செயலகத்தால் அந்த ஆணை நடைமுறைப் படுத்தப்படவில்லை. இது என் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 10ம் தேதி தலைமை செயலர், நிதிச் செயலர், சட்டத்துறை செயலர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். தொடர்ச்சியாக கோப்பு தயாரிக்கப்பட்டு நிதித்துறைக்கு அனுப்பப்பட்டது. இதன் மேல் நடவடிக்கையாக தலைமை செயலர், நிதித்துறை செயலருடன் கடந்த 7ம் தேதி கலந்துரையாடினேன்.

அதன் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய ஆணைப்படி புதுச்சேரி சட்டப்பேரவை செயலர், துறை தலைவர் நிதி ஆதாரங்களை பயன்படுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டு அந்த ஆணையை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கான புதிய அரசாணை விரைவில் வெளியிப்படும். தமிழ்ப் புத்தாண்டு முதல் நிதி தொடர்பான கோப்புகளை தலைமை செயலகம், நிதி செயலகத்துக்கு அனுப்பாமல் சட்டப்பேரவை செயலகத்திலேயே செயல்படுத்தப்படும். இதனால் கால விரயம் தவிர்க்கப்படும். புதிய நடைமுறையில் நிதி ஆணைகள், விதிகள் அனைத்தும் தவறாமல் பின்பற்றப்படும்.

இதனால் புதுச்சேரி சட்டப்பேரவை செயலகத்துக்கு நிதி அதிகாரம் பல ஆண்டுக்கு பிறகு கிடைத்துள்ளது. வருகிற 11, 12-ம் தேதியில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் காமன்வெல்த் சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு நடக்கிறது. இதில் நான், சட்டப்பேரவை துணைத் தலைவர், சட்டப் பேரவை செயலர் பங்கேற்கவுள்ளோம். வரும் 24ம் தேதி அமித் ஷா வரும்போது புதிய சட்டப்பேரவை கட்ட அடிக்கல் நாட்ட வாய்ப்புள்ளதா என ஆலோசித்து வருகிறோம்” என்று புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.