அமைச்சர் ஆகிறார் நடிகை ரோஜா – புதிய அமைச்சரவையில் வாய்ப்பு?

ஆந்திர மாநிலத்தில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை காலை பதவி ஏற்க உள்ளது. அப்போது நடிகை ரோஜா அமைச்சராக பதவி ஏற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என தனது அமைச்சர்களுக்கு பதவி ஏற்பின் போது தெரிவித்திருந்தார்.

அதன்படி அவரது தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்று இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ளன. இதை அடுத்து அண்மையில் ஆந்திர மாநில அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதற்கான கடிதங்களை அவர்கள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் வழங்கினர்.

இந்நிலையில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில புதிய அமைச்சரவை, நாளை காலை 11:31 மணிக்கு பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மூத்த அமைச்சர்கள் என 8 முதல் 10 பேருக்கு புதிய அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் 13 மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு 26 மாவட்டங்கள் உதயமானது. ஒரு மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 26 அமைச்சர்கள் பதவி ஏற்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதில் சாதி வாரியாக பிரிக்கப்பட்டு அனைத்து பிரிவினரையும் திருப்திபடுத்தும் வகையிலும், வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டும் நன்றாக பணி செய்யும் அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எந்தத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் இன்று இரவுக்குள் தெரிய வரும் எனக் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.