சத்தத்தின் மர்மத்தை தேடும் ஹீரோயின்

ஸ்ரீஅங்கா புரொடக்ஷன் சார்பில் சுந்தரவடிவேல் தயாரித்து, இயக்கி உள்ள படம் ரீ. இது கதாநாயகியை மையப்படுத்திய கதை. ஹர ஹர மகாதேவி ' படத்தில் நடித்த காயத்ரி ரமா நாயகியாக நடித்துள்ளார். பாலச்சந்தரின் ஆஸ்தான எழுத்தாளர் அனந்துவின் தங்கையின் பேரன் பிரசாந்த் ஸ்ரீனிவாசன் நாயகனாக நடித்துள்ளார்.

இவர்களுடன் பிரசாத், சங்கீதா பால், மணி சங்கர் ,சுரேஷ் பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். தினேஷ் ஸ்ரீநிவாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்பர்ஜன் பால் பின்னணிக்கும், ஹரிஜி பாடல்களுக்கும் இசை அமைத்துள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் சுந்தர வடிவேல் கூறியதாவது: முற்றிலும் வணிகமயமாகிப் போய்விட்ட இந்த வாழ்க்கைச் சூழலில் தொழில்நுட்பம் உலகத்தை உள்ளங்கைக்குள் இணைக்கிறது. உலகத் தொடர்புகள் மிக விரைவில் சாத்தியமாகிறது. ஆனால் அருகிலிருக்கும் வீடுகளில் இருப்பவர் யார்? அங்கு என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை.

இப்படியான சூழ்நிலையில் படத்தின் நாயகிக்கு அவளது பக்கத்து வீட்டிலிருந்து ஒரு சத்தம் வருகிறது. அது அவளை அலைக்கழிக்கிறது. அவளைச் சமநிலை இழக்கச் செய்கிறது. அது என்ன சத்தம் என்று அறிய முற்படுகிறாள். ஆனால் பக்கத்து வீட்டில் ஒரு நாகரிகமான டாக்டர் குடும்பம் தான் வசிக்கிறது. இந்நிலையில் எங்கிருந்து சத்தம் வருகிறது அதன் பின்னணி என்ன என்று ஆராய முற்படும் போது பல மர்மங்கள் விரிகின்றன. எதிர்பாராத திசையில் சம்பவங்கள் நடக்கின்றன. அவை என்ன ? அவற்றைப் பற்றிப் பேசும் படம் இது. என்கிறார் இயக்குனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.