'சுதந்திர போராட்டம் மீண்டும் தொடங்குகிறது!' – இம்ரான் கான் அதிரடி!

பாகிஸ்தான் நாட்டில் மீண்டும் சுதந்திர போராட்டம் தொடங்குவதாக, அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து உள்ளார்.

அண்டை நாடான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில் இம்ரான் கான் பரிந்துரையை ஏற்று, அந்நாட்டு அதிபர் பாராளுமன்றத்தைக் கலைத்தார். பாராளுமன்றத்தைக் கலைத்த அதிபரின் உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப் பதிந்தது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்றும், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு 9-ம் தேதி நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நள்ளிரவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்காக பாராளுமன்றம் கூடியது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாராளுமன்றத்தின் சபாநாயகர் ஆசாத் குவைசர், துணை சபாநாயகர் காசிம் சூரி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

பாகிஸ்தானில் கவிழ்ந்தது இம்ரான் கான் அரசு: புதிய பிரதமர் யார்?

இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் இடைக்கால சபாநாயகரை நியமித்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தின. இதில் இம்ரான் கான் தோல்வி அடைந்தார். இம்ரான் கானுக்கு எதிராக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து, பாராளுமன்ற வளாகத்தை விட்டு இம்ரான் கான் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் வெளியேறினர்.

இந்நிலையில் இன்று, சமூக வலைதளமான ட்விட்டரில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளதாவது:

1947 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் சுதந்திர நாடானது. ஆனால் தற்போது, வெளிநாட்டு சதி காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று மீண்டும் சுதந்திரப் போராட்டம் தொடங்குகிறது. நாட்டின் இறையாண்மை மற்றும் ஜனநாயகத்தை எப்போதும் பாதுகாப்பது நாட்டு மக்களே.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் பதவியை இழந்த பிறகு, இம்ரான் கான் தெரிவித்துள்ள முதல் கருத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.