பாகிஸ்தானில் கவிழ்ந்தது இம்ரான் கான் அரசு: புதிய பிரதமர் யார்?

பொருளாதார நிர்வாகத் திறமையின்மையால் நாட்டை பொருளாதார சீரழிவிற்கு கொண்டு சென்றுவிட்டார் என்று
பாகிஸ்தான்
பிரதமராக இருந்த
இம்ரான் கான்
மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும், அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பெற்றன.

இதனிடையே, பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீது கடந்த மாதம் 28ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற வேண்டுமானால் மொத்தம் உள்ள 342 எம்.பி.க்களில் 172 பேரின் ஆதரவை பெற வேண்டும்.

ஆனால், இம்ரான் கானுக்கு போதுமான எம்.பி.க்களின் ஆதரவு இல்லாததால் அவரது அரசு கவிழும் நிலை ஏற்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ரத்து செய்வதாக நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம் சூரி அறிவித்தார். மேலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று அதிபர் ஆரிப் ஆல்விக்கு இம்ரான் கான் கடிதம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக, இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் ஆரிப் ஆல்வி உடனடியாக அறிவித்துள்ளார்.

இதனை எதிர்த்து அந்நாட்டு எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றம் சென்றன. வழக்கை விசாரித்த நீதிமன்றம், நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தது செல்லாது எனவும் இம்ரான்கான் அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இம்ரான் கான்.. நீங்க பேசாம இந்தியாவுக்கே போயிருங்க.. நவாஸ் ஷெரீப் மகள் டென்ஷன்!

இந்த உத்தரவை தொடர்ந்து நள்ளிரவு 1.30 மணியளவில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பில் 174 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. இதனால், பாகிஸ்தானில் இம்ரான்கானின் அரசு கவிழ்ந்துள்ளது. மேலும், பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்தும் இம்ரான்கான் நீக்கப்பட்டார். அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி அந்நாட்டு நாடாளுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமரை பரிந்துரைக்க இன்று பிற்பகல் 2 மணிக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடுகிறது. புதிய பிரதமராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் நவாஸ் ஷெரீப் சகோதரருமான,
ஷெபாஸ் ஷெரீப்
பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.