போதையில் தொழில் அதிபர் ஓட்டிய கார் தறிகெட்டு ஓடி விபத்தில் சிக்கியது- பெண், சிறுவன் படுகாயம்

பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள மண்ணாகுட்ட பகுதியை சேர்ந்தவர் ஷ்ரவன் குமார். தொழில் அதிபரான இவர் தோரெபாய்ல் என்ற இடத்தில் அலுவலகம் வைத்துள்ளார். நேற்று இவர் தனக்கு சொந்தமான காரில் பல்லால்பாக் பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. திடீரென ஷ்ரவன் குமார் காரை தாறுமாறாக ஓட்ட தொடங்கினார். அதிக போதையால் அவரால் காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால் கார் எதிர்திசையில் சாலை தடுப்பை தாண்டி கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. இதில் அந்த வழியாக சென்ற இரு சக்கர வாகனங்கள், கார்கள் மீது மோதியது. இந்த விபத்தில் சாலையில் ஸ்கூட்டர் ஓட்டி வந்த ப்ரீத்தி மனோஜ் (வயது 47) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இது தவிர இந்த விபத்தில் மற்றொரு காரில் இருந்த 7 வயது சிறுவன் அமை ஜெயதேவன் படுகாயமடைந்தான். காரை ஓட்டிவந்த ஷ்ரவன் குமார் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார். விபத்து நடந்த இடத்தில் ஏராளமான மக்கள் திரண்டனர். விபத்துக்கு காரணமான டிரைவர் ஷ்ரவன் குமாரை இடிபாடுகளுக்குள் இருந்து மீட்டனர்.
இந்த விபத்து குறித்த வீடியோ பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விபத்து நடந்த இடத்திற்கு வந்த போலீசார் ஷ்ரவன்குமாரிடம் விசாரித்து வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.