முதல்வர் ஆதித்யநாத் ட்விட்டர் கணக்கு ஹேக் – சமூக விரோதிகளுக்கு கடும் எச்சரிக்கை

லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலக ட்விட்டர் கணக்கு வெள்ளிக்கிழமை இரவு 12.30 மணி அளவில் ஹேக் செய்யப்பட்டது. சிஎம்ஆபிஸ்யுபி (CMOfficeUP) என்ற அந்தக் கணக்கில் யோகி ஆதித்யநாத்தின் முகப்புப் படம் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக கார்ட்டூன் குரங்கு முகப்புப்படமாக வைக்கப்பட்டது. 400-க்கும் மேற்பட்ட சம்பந்தமில்லாத ட்வீட்டுகள் அந்தக் கணக்கிலிருந்துப் போடப்பட்டன. முந்தைய பதிவுகள் சிலவும் அழிக்கப்பட்டன. சில மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அந்தக் கணக்கை அரசு மீட்டுள்ளது.

40 லட்சம் பேர் பின்பற்றும் உபி முதல்வரின் அலுவலக ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வேலையில் ஈடுபட்டுள்ள சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

இது முதல்முறை அல்ல

முக்கிய நபர்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்படுவது புதிதல்ல. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. அதில் கிரிப்டோகரன்சி முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் பதிவு போடப்பட்டது.

மத்திய அரசு கணக்குகள்..

கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரையில் மத்திய அரசு தொடர்புடைய 600-க்கும் மேற்பட்ட சமூக வலைதள கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன என்று கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மக்களவையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். 2017-ல் 175, 2018-ல் 114, 2019-ல் 61, 2020-ல் 77, 2021-ல் 186 கணக்குகளும் இந்த ஆண்டு இதுவரையில் 26 கணக்குகளும் ஹேக் செய்யப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.