சூப்பர் ஸ்டாரின் திரையுலக வரலாற்றில் இது ஒரு மைல் கல்! | பாட்ஷா நினைவலைகள்

பரிணாம வளர்ச்சியும் பகுத்தறிவுப் புரட்சியும்!

குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்பது பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு. அதனால்தானோ, மனிதனுக்கு வால் இல்லையென்றாலும், வால்தனத்திற்குக் குறைவேயில்லையோ! அதோடில்லாது, கிளைக்குக் கிளை தாவும் குரங்கினைப் போல, அவன் மனமும் நொடிக்கு நொடி மாறிக் கொண்டேயிருக்கிறதோ? இது ஒரு புறமிருக்க, பரிணாம வளர்ச்சிக்கு மற்றொரு உதாரணமாக நம் கண்முன்னே இருப்பது ரிக்‌ஷா! அதன் பரிணாம வளர்ச்சி நாம் அனைவரும் அறிந்ததுதானே. முதலில் ‘கை ரிக்‌ஷா’. இருவரை அமர வைத்து, ரிக்‌ஷாக் காரர் இழுத்துக் கொண்டே ஓடுவார். அதன் பிறகு ‘சைக்கிள் ரிக்‌ஷா’. இருவரை அமர வைத்துக்கொண்டு, முன் சீட்டில் உட்கார்ந்து பெடலை மிதித்து, பயணியரை அவர்களின் இடங்களில் சேர்ப்பார். பின்னர் வந்ததுதான் தற்போதுள்ள ஆட்டோ ரிக்‌ஷா. மூவரை, நால்வரை ஏற்றிக்கொண்டு இடைவெளிகளில் புகுந்து, அட்டகாச வேகத்தில் சேருமிடம் அடையப் பயன்படும், அற்புத சாதனம். அதன் வளர்ச்சி, ஆயிரமாயிரம் குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. பெரு நகரங்களில் மட்டுமே இருந்த ஆட்டோ ரிக்‌ஷா, தற்போது பட்டி, தொட்டிகளிலும் ஓடிக் கொண்டிருப்பதும், ஒரு பரிணாம வளர்ச்சியின் அடையாளம்தானே! அதோடு, ரிக்‌ஷா கழன்று போக ‘ஆட்டோ’ மட்டுமே இப்போது ஆதிக்கம் செலுத்துகிறது. அது மட்டுமா? வாய் பேச முடியாதவர்களுக்கும் வழிக்குத் துணையாக வருகிறது. வாய் விட்டுக் கூப்பிட வேண்டாம். கை தட்டினால் போதும். கால் வைத்து ஏறும் தூரத்தில், கச்சிதமாய் வந்து நிற்கும்!

27 ஆண்டுகளுக்கு முன்பாக 1995-ல் சூப்பர் ஸ்டார் ரஜினி ஆட்டோ ஓட்டுனராக வந்ததிலிருந்து ஆட்டோவின் மவுசு கூடி விட்டது. கூடியதால்தான், பெரும் நிறுவனங்களும்கூட ஆட்டோ ஓட்டுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டன. ‘திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்’ என்பார்கள். அதனால்தான் ஆயிரம் பொய்யைச் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தி வைக்கலாம் என்று சொன்னார்கள். ஆனால், சில ஆயிரங்களுக்காகத் திருமணத்தை நிறுத்த, இக்கால மாப்பிள்ளை வீட்டார் முயற்சிப்பதை, எந்தக் கணக்கில் சேர்ப்பது? எந்தக் கணக்கிலும் சேர்க்க முடியாது.

பாட்ஷா

அதிலும், மாணிக்கத்திற்குத் தெரிந்தவர்களுக்கு அந்த அவலம் நடக்க, அவர் விடுவாரா என்ன? தருணத்தில் உதவுவது என்பது மிகுந்த சிறப்புடையது. தாலி கட்ட வேண்டிய நேரத்தில் மணமகன் எழும்ப, கேட்ட பணத்தைக் கொடுத்து மணப்பெண்ணின் கழுத்தில் தாலி ஏறச் செய்வார் ரஜனி. அசத்தலான ஆரம்பம். கிராமப் புறங்களில் சிலரை, ’அவர் அப்பழுக்கற்ற மாணிக்கம்’ என்று ஊரார் சொல்வார்கள். இப்பட மாணிக்கமும் அப்படிப்பட்டவர்தான். தானும், தன் நான்கு பேர் கொண்ட குடும்பமும் அமைதியாக வாழ, வம்பு, தும்புக்குப் போகாமல், வருகின்ற சண்டையையும் ஒதுக்கி வாழ்வார் மாணிக்கம். தங்கைக்குப் பணக்கார மாப்பிள்ளை, தம்பி சிவாவுக்கு காவல் துறை பணி, மற்றொரு தங்கைக்கு மருத்துவக் கல்லூரி சீட் என்று ஒவ்வொரு தியாக விளக்கேற்றுவதிலேயே கண்ணுங்கருத்துமாக இருப்பார். வணிகர்களிடம் அநியாய வரி வசூல் செய்யும் இந்திரனின் ஆள் பெரியவர் ஒருவரை அடித்துத் தள்ளி விட, சிவா தட்டிக்கேட்க, அவரையே மின்கம்பத்தில் கட்டியடிக்க இந்திரன் முயல, தம்பிக்காகத்தான் அந்த அடிகளை வாங்கிக்கொள்வார்-சிரித்தபடி!

இதற்கிடையில் கேசவன் என்ற தொழிலதிபரின் மகள் பிரியா, மாணிக்கம் ஆட்டோவில் அடிக்கடி பயணிக்க, இருவருக்கும் இடையே காதல் மலரும். தன் சகோதரியின் மீது இந்திரன் கை வைக்கும் நேரத்தில் வெகுண்டெழுந்து, துவம்சம் செய்யும் காட்சியிலிருந்து வேகம் கூடி விடும். ’உள்ள போ’ என்று சிவாவையும் உள்ளே அனுப்பி விட்டு, அவர் அடிக்கும் அடிகளில் இந்திரனின் ஆட்கள் ‘இப்பவோ அப்பவோ’ என்று இழுத்துக் கொள்ள, இந்திரனை அதே மின்கம்பத்தில் கட்டி அடிப்பார் ரஜினி. அண்ணனின் உண்மை முகத்தைக் காண தம்பி விழைய, ’ஃப்ளாஷ் பேக்’ ஆரம்பமாகும்.

மும்பையை மார்க் ஆண்டனி(ரகுவரன்) எனும் தாதா தன் அடாவடிகளால் அடக்க, சிறிய வயது மாணிக்கமும் பாட்ஷாவும் இணைந்து எதிர்க்க, பாட்ஷாவை ஆண்டனி ஆட்கள் கொலைசெய்ய, பாட்ஷாவின் இறுதி ஊர்வலம் முடியும் முன்னால் அவர்களைப் பழிவாங்கும் மாணிக்கம் ’மாணிக் பாட்ஷா’ ஆகி, தாதாவை எதிர்ப்பார். ஆண்டனியின் மக்கள் விரோதச் செயல்களைத் தடுத்து, மக்கள் நலனைப் பாதுகாக்கப் போராடுவார். தந்தை ரங்கசாமி, ஆண்டனியிடம் நீண்ட நாட்கள் பணியாற்றியதால், மாணிக்கத்தை விட்டுவிட்டதாக ஆண்டனி கூறுவார். மாணிக் பாட்ஷாவை எதிர்க்க முடியாத ஆண்டனி, கோபத்தில் ரங்கசாமியைச் சுட்டுவிட, மாணிக் பாட்ஷாவை, தாயுடன் சென்னை சென்று விடுமாறு கூறி விட்டு இறந்து விடுவார் ரங்கசாமி. விபத்தில் இறந்ததாகக் கதை கட்டி விட்டு, மாணிக்கம் என்ற அமைதி விரும்பியாகவும், ஆட்டோ ஓட்டியாகவும் செட்டிலாகி விடுவார் ரஜனி- சென்னையில்.

பிரியாவுக்குக் கேசவன் வேறு மாப்பிள்ளை பார்க்க, திருமண மண்டபம் வந்த மாணிக்கம்தான் பாட்ஷா என்பதையறிந்த கேசவன், பிரியாவை ரஜனியுடன் அனுப்பச் சம்மதிப்பார். சிறையிலிருக்கும் ஆண்டனி, பாட்ஷா உயிருடன் இருப்பதையறிந்து தப்பித்து வந்து, ரஜனி குடும்பத்தாரையே ஓரிடத்திற்குக் கடத்திச் சென்று அடைத்துவிட, தன் நண்பர்கள் உதவியுடன் குடும்பத்தினரை மீட்பார். இருப்பினும் ஆண்டனி பாட்ஷாவைச் சுட முயல, சிவா பாட்ஷாவின் பின்னாலிருந்து ஆண்டனியைச் சுட்டு விடுவார். அவரின் இறப்புடன் படம் இனிதே முடியும். கெட்டவர்கள் அழிவது இனிமை பயப்பதுதானே!

`பாட்ஷா’ ரஜினி

சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில், தேவாவின் இசையில், பாலகுமாரனின் வசனத்தில், பி. எஸ். பிரகாசுவின் ஒளிப்பதிவில், ரஜனி, ரகுவரன், சரண்ராஜ், தேவன், நக்மா, ஆனந்த ராஜ், விஜயகுமார் போன்றோர் முக்கியக் கதாபாத்திரங்கள் ஏற்க, சத்யா மூவீசின் தயாரிப்பில் உருவானதுதான் பாட்ஷா திரைப்படம். ‘ஆர். எம். வீ-யின் ‘டச்’ இந்தப்படத்திற்கு நிறையவே உண்டென்பதாலேயே விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாது போனது!’ என்று அப்பொழுதே பேசப்பட்டது. அதற்கேற்ப, ’உள்ள போ’ வசனம் வரும் வரை, சுமார் ஒரு மணி நேரத்திற்குக் குடும்பக் கதையுடன் ஓடும் படம், அதன் பின்னர் ‘டிஷ்… டிஷ்’ என்று சூடு பிடித்து, வேகம் காட்டும். க்ரைம்… த்ரில்லிங்… என்று, எதற்கும் குறைவில்லாமல் போகும். ரஜனியின் அடிகளில் அனல் பறக்கும்.

இப்படத்தில் மூன்று வில்லன்கள் என்றே சொல்லலாம். ’மார்க் ஆண்டனி’ முதல் வில்லன் என்றால், ’இந்திரன்’ இரண்டாவது வில்லனாகவும், ’கேசவன்’ மூன்றாவது வில்லனாகவும் வருவார்கள். தாதாவுக்குத் தாதாவாக இருப்பவர்கள் மோசத்திலும் மோசமாக இருப்பார்கள் என்பதுதான் வரலாறு. ஆனால், இப்படத்தில் தாதா ஆண்டனிக்குத் தண்ணீர் காட்டும் தாதாவாகவும், மக்கள் நலன் விரும்பும் பாத்திரமாகவும் மாணிக் பாட்ஷாவைப் படைத்து, புதுமை காட்டினர். அந்தப் புதுமைதான் படத்தின் அடித்தளமே. அந்த அடித்தளம்தான் மகத்தான வெற்றிக்கு வழி வகுத்தது. பாலகுமாரனின் வசனங்கள், படத்தை அடுத்த படிக்கு எடுத்துச் செல்ல அஸ்திவாரமாக அமைந்தன.

’நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி’ வசனம் மிகுந்த பாப்புலர் ஆயிற்று. பலரை படத்தைப் பல தடவை பார்க்கத் தூண்டிற்று. ’நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நெறையக் கொடுப்பான். ஆனா கை விட்ருவான்’ வசனம் தத்துவம் பேசிற்று. ’நான் மூளையைக் கேட்டு வேலை செய்யல…இதயத்தைக் கேட்டு வேலை செய்றேன்’ என்பதைச் செய்கையால், தட்டிச் சொல்லிக் காண்பிப்பார் ரஜனி. ஆண்டனியிடம், ‘ஹே… ஹே… ஹே… இத பாரு… உனக்கும் எனக்குந்தான் சண்ட… இந்த பாட்ஷாவுக்கும் ஆண்டனிக்குந்தான் சண்ட… இதில நீ சாகணும்… இல்ல நான் சாகணும்… உன் ஆளுங்க சாகணும்… இல்ல என் ஆளுங்க சாகணும். பொதுமக்கள் இல்ல… அப்பாவி மக்கள் இல்ல.’ – இந்த வசனத்தை உண்மையாகவே அனைவரும் பின்பற்றினால், அப்பாவிப் பொது மக்களின் அல்லல்கள் நிச்சயமாகத் தீரும். உக்ரைன் படையும் ரஷ்யப் படையும் மட்டுமே மோதிக் கொண்டிருந்தால், உக்ரைன் வீதிகளில் ஒன்றுமறியா அப்பாவி மக்களின் பிணங்கள் குவிந்திருக்க வாய்ப்பில்லைதானே? இது பகுத்தறிவுப் புரட்சிதானே! இது போன்ற கருத்துகள் நடைமுறைப் படுத்தப்படாததுதான் வேதனை. ’டேய்! யாருகிட்ட என்ன பேசிக்கிட்டிருக்க?’ என்ற ரங்கசாமிக்குப் பதிலாக, ’தெரியும்ப்பா. ஒரு அயோக்கியன்கிட்ட உண்மையைப் பேசிக்கிட்டு இருக்கேன்’ என்ற ரஜனியின் பதிலில், அவர் குண நலன் பிரதிபலிக்கும்.

இப்படி இன்னும் பல வசனங்கள், காலங்களைக் கடந்தும் நம் உள்ளச் சோலையில் உலா வந்து கொண்டிருப்பதிலிருந்தே அவற்றின் தன்மை விளங்கும். ’கடன் வாங்குவதும் தப்பு; கொடுப்பதும் தப்பு’ என்பது, பல பிரச்னைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் நல்ல பாலிசி. பின்பற்றுவதுதான் கடினமாக உள்ளது. வசன உச்சரிப்பில், ரஜினிக்கு ஒரு புதிய யுக்தியை அறிமுகப்படுத்தினார்கள். ‘ஹே… ஹே… ஹே…’ என்பது போல மூன்று தடவை உச்சரிப்பது!

இயக்குனர்கள், நல்ல எழுத்தாளர்களை ஊக்குவிக்க முன் வர வேண்டும் என்பதற்கு பாலகுமாரன் வழி வகுத்துச் சென்றுள்ளார். இயக்குனர்கள் நினைவில் கொள்வார்களாக. வைரமுத்துவின் ஆறு அழகிய பாடல்கள் படத்திற்கு மேலும் மெருகேற்ற உதவின. ’நான் ஆட்டோக்காரன், ’’பாட்ஷா பாரு’, ‘ரரா ரரா ராமையா’, ’ஸ்டைலு ஸ்டைலுதான்’ போன்றவை மிகப்பிரபலம்.

ராமையா பாட்டு பழம்பாடலை அடிப்படையாகக் கொண்டது. ’ஓரெட்டில் ஆடாத ஆட்டம், ஆட்டமல்ல; ஈரெட்டில் கற்காத கல்வி, கல்வி அல்ல; மூவெட்டில் செய்யாத திருமணம், திருமணமல்ல; நாலெட்டில் பிறக்காத குழந்தை, குழந்தையல்ல; ஐயெட்டில் சேர்க்காத சொத்து, சொத்தல்ல; ஆறெட்டில் சேர்க்காத புகழ், புகழல்ல; ஏழெட்டில் சாவாத சாவு, சாவல்ல!’ என்பதே அப்பாடல். சராசரி வயது அப்போதெல்லாம் குறைவாக இருந்ததனால், 56 வயதுடன் வாழ்க்கை முடிந்தால் நலமென்று கருதப்பட்டது. அந்தந்தப் பருவத்தில், அந்தந்தப் பருவத்துக்கான நலன்களை அனுபவித்து விடுவதால், ஐம்பத்தாறே போதுமென்று முடிவு செய்தார்கள் போலும்!

பாட்ஷா

கதை, வசனம், நடிப்பு, பாடல்கள், ஒளிப்பதிவு என்று 5 முக்கியப் பிரிவுகளில் ஒவ்வொன்றுக்கும் மார்க் அளித்தால், எது சிறந்தது என்பது தெளிவாகும். கன்னடத்தில், ’கோட்டி கோபா’, வங்காளத்தில்’குரு’, பங்களா தேஷில், ’சுல்தான்’ மற்றும் ’மாணிக் பாட்ஷா’ என்று இருமுறை, என பல மொழிகளுக்கும் பறந்தார் பாட்ஷா. சூப்பர் ஸ்டாருக்கு, சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்றுத் தந்தது பாட்ஷா. திரையரங்குகளில் சுமார் 15 மாதங்கள் ஓடி, வரலாறு படைத்தது பாட்ஷா.

திரைப்படங்களைப் பொழுதுபோக்கு என்று ஒதுக்கிவிடாமல், அதில் காட்டப்படுகின்ற நல்ல கருத்துகளை நாம் வாழ்வில் கடைப்பிடிக்க முன் வர வேண்டும். அப்பொழுதுதான் படம் எடுத்தவர்களுக்கும் பயன், பணம் கொடுத்துப் பார்க்கும் நமக்கும் பயன்! திரைப்படங்கள் எளிதாக மக்களைச் சென்றடையும் உயர் மீடியா என்பதால்தான், அரசு, மது, புகை மற்றும் கேன்சர் ஒழிப்பு விளம்பரங்களைப் படம் ஆரம்பிக்கும் முன்பாகவே போட்டு மக்களை உஷார்படுத்துகிறார்கள்.

பாட்ஷா

சூப்பர் ஸ்டாரின் திரையுலக வரலாற்றில், பாட்ஷா ஒரு‘மைல் கல்’என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ரெ.ஆத்மநாதன்,கூடுவாஞ்சேரி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.