தனியார் மையங்களுக்கு இலவச கோவிஷீல்டு தடுப்பூசி சீரம் நிறுவனம் அறிவிப்பு

புதுடெல்லி, 
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தனியார் தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் நேற்று முதல் போடப்படுகிறது.
இந்த தடுப்பூசிகளை தனியார் தடுப்பூசி மையங்களுக்கு விலை குறைத்து ஒரு டோஸ் ரூ.225 என்ற விலைக்கு வழங்குவதாக கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான புனே இந்திய சீரம் நிறுவனமும், கோவேக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனமும் அறிவித்துள்ளன.

இந்நிலையில், தனியார் தடுப்பூசி மையங்களில் ஏற்கனவே இருப்பு வைக்கப்பட்டுள்ள தடுப்பூசிக்கும், பூஸ்டர் டோசுக்காக தற்போது வினியோகிக்கிற தடுப்பூசிக்கும் விலை வித்தியாசம் உள்ளது.
இதைச்சரிகட்டுவதற்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள, காலாவதியாகாத தடுப்பூசி விலை வேறுபாட்டை ஈடுசெய்வதற்காக, தனியார் தடுப்பூசி மையங்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என இந்திய சீரம் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.
இதே போன்று பாரத் பயோடெக் நிறுவனமும், தற்போது தனியார் தடுப்பூசி மையங்களில் உள்ள கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பு விலை வித்தியாசத்தை ஈடுகட்டுவதற்கு கூடுதல் டோஸ் தடுப்பூசிகள் வினியோகிக்கப்படும் என அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.