RR vs LSG: ஸ்டாய்னிஸை அடக்கிய அறிமுக பௌலர் குல்தீப்; டிரெண்டை மாற்றி அசத்தும் ராஜஸ்தான்!

நடந்துக் கொண்டிருக்கும் ஐ.பி.எல் சீசன் ‘பாட்டி வடை சுட்ட கதை’ க்கு சமமாக பெரிதாக சுவாரஸ்யமே இல்லாமல் சென்றதற்கு அணிகளின் அணுகுமுறையும் ஒரு காரணமாக இருந்தது. பனியின் தாக்கத்தைக் காரணம் காட்டி டாஸை வென்றவுடன் சேஸிங்க் செய்ய முடிவெடுத்து எத்தனை பெரிய ஸ்கோராக இருந்தாலும் அடித்து வெளுக்க வேண்டும். அப்படி சேஸ் செய்யும் அணிகள்தான் தொடர்ந்து வென்று கொண்டேவும் இருக்கின்றன. இந்த அலுத்துப்போன ட்ரெண்ட்டை மாற்றியிருக்கும் ஒரே அணி ராஜஸ்தான் ராயல்ஸ்தான்.

அந்த அணி வென்றிருக்கும் மூன்று போட்டிகளும் ஸ்கோரை டிஃபண்ட் செய்து வென்றவை. இதில், இப்போது லக்னோவிற்கு எதிராக ஆடி முடித்திருக்கும் ஆட்டமும் அடக்கம்.

165 என்கிற சுமாரான ஸ்கோரை டார்கெட்டாக நிர்ணயித்த போதும் ராஜஸ்தான் அணி போராடி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலே டாஸை வென்றிருந்தார். ஒரு மாற்றமுமில்லை. அதே கதைதான். அதே காரணம்தான். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்திருந்தது. அந்த அணியிக் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை பென்ச்சில் வைத்துவிட்டு படிக்கல்லை ப்ரோமோட் செய்து ஓப்பனராக்கியிருந்தார்கள். ஆனால், பட்லர் – படிக்கல் இந்தப் புதிய கூட்டணி பெரிதாகச் சோபிக்கவில்லை. படிக்கல் தட்டுத்தடுமாறி சில பவுண்டரிகளை அடித்திருந்தார். பட்லர் கடந்த போட்டிகளை போன்ற பெரிய இன்னிங்ஸ்களை ஆடத் தவறினார். ஆவேஷ்கான் வீசிய பவர்ப்ளேயின் 6வது ஓவரில் பட்லர் ஒரு வெறித்தனமான இன்கம்மிங் டெலிவரிக்கு லெக் ஸ்டம்பை பறிகொடுத்து வெளியேறியிருந்தார். பட்லர்தான் ராஜஸ்தான் அணியின் பேட்டிங் ஆர்டருக்கு முதுகெலும்பு. அவரே முறிந்த பிறகு, மற்ற வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை விடத் தொடங்கினர். படிக்கல் 29 ரன்களில் கிருஷ்ணப்பா கௌதமின் பந்தில் ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகியிருந்தார். கேப்டன் சாம்சன் ஹோல்டரின் ஒரு லோ ஃபுல்டாஸில் lbw ஆகி ஏமாற்றினார். 67-4 என ராஜஸ்தான் அணி திணறிக்கொண்டிருந்தது. இந்தச் சமயத்தில்தான் ஹெட்மெயர் உள்ளே வந்தார்.

பெரும் சறுக்கலிலிருந்து மீண்டு வந்து ராஜஸ்தான் ஒரு கௌரவமான ஸ்கோரை எட்டியதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் ஹெட்மெயரே. முதலில் அஷ்வினோடு கூட்டணி அமைத்து மெதுவாக ஆடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்.

Hetmayer

ஹெட்மெயர் சந்தித்திருந்த முதல் 25 பந்துகளில் 21 ரன்களை எடுத்திருந்தார். அடுத்த 11 பந்துகளில் 38 ரன்கள் வந்திருந்தன. குறிப்பாக, கடைசி 3 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 50 ரன்களை அடித்திருந்தது.

அதற்கும் அடியேனின் கிருபைதான் காரணம். ஆவேஷ் கான் ஹோல்டர் ஆகிய டெத் ஓவர்களிலுமே சிக்சர்களைப் பறக்கவிட்டிருந்தார். ராஜஸ்தான் 120-ஐ தொடுமா எனக் கருதப்பட்ட நிலையில் மெதுவாக முன்னேறி ஒரு கட்டத்தில் சீறி பாய்ந்து 160+ ஸ்கோரை எட்டியது?

ஹெட்மெயரின் அடிதடிக்கும் ராஜஸ்தானின் மீட்சிக்கும் க்ருணால் பாண்டியா விட்ட அந்த ஒரு கேட்ச் மிக முக்கிய காரணமாக இருந்தது. ஹெட்மெயர் 14 ரன்களில் இருந்த போது லாங் ஆனில் கொடுத்த மிக சுலபமான கேட்ச்சை க்ருணால் கோட்டைவிட்டார். இதன் விளைவாகத்தான் ராஜஸ்தான் அணி அசாத்தியமாக 165 ரன்களை எடுத்திருந்தது.

வலுவான பேட்டிங் லைன் அப்பைக் கொண்டிருந்த லக்னோ அணிக்கு இன்று மேலும் வலுவைச் சேர்க்கும் வகையில் ஸ்டாய்னிஸும் பேட்டிங்க் ஆர்டரில் இருந்தார். இது அந்த அணிக்கு மிகப்பெரிய பூஸ்ட்டாக இருந்தது. ராஜஸ்தான் அணியின் சார்பில் ட்ரென்ட் போல்ட் முதல் ஓவரை வீசினார்.

Boult

ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து வீசிய போல்ட் முதல் பந்திலேயே ராகுலின் விக்கெட்டை வீழ்த்தினார். பந்தைப் பார்த்து ராகுல் ஒரு முடிவிற்கு வருவதற்குள் சீறிபாய்ந்த பந்து ஸ்டம்புகளை வேரோடு உருவியது.

எப்படி ராஜஸ்தான் அணி பட்லரின் விக்கெட்டிற்குப் பிறகு தொடர்ந்து சறுக்கியதோ அதேபோன்றுதான் லக்னோ அணி ராகுலின் விக்கெட்டை இழந்த பிறகு சறுக்கியது. என்ன, பட்லரின் விக்கெட் பவர்ப்ளே முடியும் தறுவாயில் வந்திருந்தது. ராகுலின் விக்கெட் பவர்ப்ளேயின் முதல் டெலிவரியிலேயே வந்திருந்தது. அதனால் வீழ்ச்சியின் வேகமும் ராஜஸ்தானை விட வீரியமாக இருந்தது. போல்ட்டின் அந்த முதல் ஓவரிலேயே கிருஷ்ணப்பா கௌதமும் lbw ஆகி வெளியேறினார். மேலே ப்ரமோட் செய்யப்பட்டிருந்த ஹோல்டரின் விக்கெட்டையும் பிரசித் கிருஷ்ணா பவர்ப்ளேக்குள்ளாகவே தூக்கியிருந்தார். லக்னோ அணி பவர்ப்ளேக்குள்ளாக 31 ரன்களை மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. டீகாக் ஒரு முனையில் விக்கெட்டே விடாமல் நின்றாலும் இன்னொரு முனையில் தீபக் ஹூடா மற்றும் க்ருணால் பாண்டியா இருவரும் ஓரளவுக்கு பங்களிப்பு செய்தாலும் அவர்களால் அணியை முழுவதுமாக சரிவிலிருந்து மீட்க முடியவில்லை.

Chahal

பதோனி, டீகாக், பாண்டியா, சமீரா ஆகியோரை சஹால் தனது விரிவான லெக் ப்ரேக்குகளாலும் ஏமாற்றும் கூக்ளிக்களாலும் வீழ்த்தியிருந்தார்.

கடைசிக்கட்ட ஓவர்களில் ஸ்டாய்னிஸ் உள்ளே வந்த பிறகுதான் ஆட்டம் கொஞ்சம் சூடுபிடிக்கத் தொடங்கியது. குறிப்பாக, 19வது ஓவரில் ஸ்டாய்னில் ஒரு காட்டு காட்டியிருந்தார். ஒரு சிக்சர் ஒரு பவுண்டரியுடன் ஸ்டாய்னிஸ் 12 ரன்களை எடுக்க, ஆவேஷ் கான் சர்ப்ரைஸாக ஒரு சிக்சரை அடித்து அந்த ஓவரை 19 ரன்களை வாரியெடுத்த ஓவராக முடித்திருப்பார். ஸ்ட்ரைக்கில் ஸ்டாய்னிஸ் இருக்கிறார். கடைசி ஓவரில் 15 ரன்களை டிஃபண்ட் செய்தாக வேண்டும். யாரை பந்துவீச வைப்பது? ராஜஸ்தானுக்கு சாய்ஸெல்லாம் இல்லை. ஓவர் மீதமிருந்த ஒரே ஆள் குல்தீப் சென் அவரிடம்தான் அந்த ஓவரை கொடுத்தாக வேண்டும். அவருக்கு இந்த போட்டிதான் அறிமுகப்போட்டி. வேறு வழியின்றி அவரின் கையில்தான் பந்தும் செல்கிறது. முதல் போட்டியிலேயே மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை. பிரசித் கிருஷ்ணா மும்பைக்கு எதிரான போட்டியில் பொல்லார்டை க்ரீஸில் வைத்துக் கொண்டு டெத் ஓவரை அட்டகாசமாக வீசியிருப்பார். இங்கே அந்த பிரசித் கிருஷ்ணாவே அடித்து வெளுக்கப்பட்டிருக்கிறார். அப்படியான சூழலில் ஸ்டாய்னிஸுக்கு இந்த அறிமுக பந்துவீச்சாளர் ஈடுகொடுக்க முடியுமா எனும் கேள்வி அனைவருக்குமே இருந்தது. ஆனால், இந்த கடைசி ஓவரை வேறு யார் வீசியிருந்தாலும் இவ்வளவு சிறப்பாக வீசியிருக்கமாட்டார்கள் எனப் பாராட்டும் அளவுக்கு குல்தீப் சிறப்பாக வீசியிருந்தார். பனியின் தாக்கம் பற்றிய கவலையெல்லாம் இல்லாமல் துல்லியமாக தான் நினைத்த லைன் & லெந்த்தில் வீசி ஸ்டாய்னிஸைத் திணறடித்தார்.

Kuldeep

மொத்தமாக 5 பந்துகளை குல்தீப் வீசியிருந்தார். அதில் முதல் மூன்று பந்துகளும் டாட். அங்கேயே போட்டி முடிந்துவிட்டது.

ஆறுதலாக கடைசி இரண்டு பந்திலும் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரியை ஸ்டாய்னிஸ் அடித்திருந்தார். சந்தேகத்தோடு கடைசி ஓவரை வாங்கிய குல்தீப் 15 ரன்களை டிஃபண்ட் செய்து ராஜஸ்தானை வெல்ல வைத்தார். 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் விறுவிறுப்பான முறையில் வென்றது.

மற்ற அணிகள் புறச்சூழலின் மீது குற்றம் கூறி சாக்குப்போக்குகளை அடுக்கிக் கொண்டிருக்கும் சூழலில், ராஜஸ்தான் வென்றிருக்கும் மூன்று போட்டிகளும் ஸ்கோரை டிஃபண்ட் செய்து பெற்றவை என்பது கொண்டாடத்தக்கதே!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.